Published : 24 Jan 2014 12:00 AM
Last Updated : 24 Jan 2014 12:00 AM

ஆகாயத்தில்
காதலித்தேன்: ஹன்சிகா

சேட்டை படத்தில் விமானப் பணிப்பெண், சிங்கம் படத்தில் பள்ளி மாணவி, பிரியாணி படத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் களைகட்டும் துள்ளலோடு ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறார் ஹன்சிகா. கோலிவுட்டின் இளம் ஹாட் ஹீரோ சிவகார்த்திகேயனோடு நடித்துக்கொண்டே, மற்றொரு அறிமுக ஹீரோவான சித்துவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். சத்யம் பட இயக்குநர் ராஜசேகரின் 'உயிரே உயிரே’ படப்பிடிப்பில் கிடைத்த ஹன்சிகாவிடம் பேட்டி என்றதும்... ‘பர்சனல் கேள்வி இல்லை என்றால் நான் எப்போது வேண்டுமானாலும் பேட்டி கொடுக்கத் தயார்’ என்று ஆரம்பித்தார். பேட்டியிலிருந்து...

ஆச்சரியமாக இருக்கிறது! அறிமுக ஹீரோவுடன் எல்லாம் நடிக்கிறீர்களே?


சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்புக்
கொண்டபோதும் இதையேதான் கேட்டார்கள். அவர் இப்போது பெரிய ஹீரோ ஆகவில்லையா? சிவகார்த்திகேயன் மாதிரி சித்துவும் வர மாட்டாரா என்ன? நானும்கூட ஆரம்பத்தில் புதுமுகம்தான். டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தபோது என்னை “ஸ்மால் ஸ்கிரீன் ஆர்டிஸ்ட்” என்றார்கள். அதற்காக ஃபீல் பண்ணியிருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.

இத்தனை படங்கள் தாண்டியும் இன்னும் தமிழ் பேசக் கற்றுக்கொள்ளவில்லையே?


முன்புக்கு நான் இப்போது எவ்வளவோ மேல். நீங்கள் அடுத்த முறை பேட்டி எடுக்கும்போது கண்டிப்பாக நான் தமிழில் பேட்டி கொடுப்பேன் போதுமா?


இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?


காதல்தான் ஸ்பெஷல். ப்ரியா என்ற கதா
பாத்திரத்தில் நடிக்கிறேன். இதை ‘லவ் இன்
தி ஸ்கை’ என்றுகூடச் சொல்லலாம். ஒரு பயணத்
தின்போது நடக்கும் காதல் கதை. ஆகாயத்தில் காதலித்தேன். தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு இந்தப் படத்துக்குத்தான் அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். டாக்கி போர்ஷனுக்கு மட்டும்
40 நாட்கள் கால்ஷீட் என்றால் பார்த்துக்கொள்ளுங்
கள். காதல் காட்சிகளைச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.


காதல் ஸ்பெஷல் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது.. நீங்களும் சிம்புவும் இணைந்து காதலை அறிவித்தீர்கள். ஆனால் தற்போது இருவருக்கும் சண்டை என்று செய்தி வெளியானதே நிஜம்தானா?


பர்சனல் கேள்வி வேண்டாம் என்றேன். ஆனால் நீங்கள் விடுகிற மாதிரி இல்லை. என்றாலும் பரவாயில்லை. எங்கள் காதல் எதில் முடிய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? அதைச் சொல்லுங்கள் முதலில்.

இப்படிக் கோபித்துக்கொண்டால் எப்படி? கேள்விப்பட்டதை வைத்துக் கேட்டோம்...


முதலில் காதலிக்க விடுங்கள். நாங்கள் அமைதியாக இருப்பது நீங்களும் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். நேரம் வரும்போது கண்டிப்பாக மீடியாவுக்குச் சொல்வேன். எதையும் பாசிடிவாக நினைத்தால் நல்லது.

சரி விடுங்கள்.. சிவகார்த்திகேயனிடன் மான் கராத்தே கற்றுக்கொண்டீர்களா?


சிவகார்த்திகேயன்தான் பல காட்சிகளில் மான் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்குகிறார். இந்தத் தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது இயக்குநர் திருக்குமரன் சொன்ன விளக்கத்தைக் கேட்டுச் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. இந்தப் படம் இன்னொரு பிளாக்பஸ்டர் ஆகும். நான் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.


சிவகார்த்திகேயன் ஒரு நகைச்சுவை இளவரசன். நீங்கள் நடிக்கும் பல படங்களில் சந்தானமும் இருக்கிறார். இவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்?


காமெடியில் எனக்கு நல்ல டைமிங் சென்ஸ் இருப்பதாக சந்தானமும் சுந்தர் சி. சாரும் சொன்னபோது எனக்கு ஆச்சரியம். காமெடியில் இன்னும் நல்ல பேர் வாங்கணும். அதற்காக சந்தானம், சிவகார்த்திகேயன் இரண்டு பேர் கிட்டேயும் நிறைய கவனிச்சு கத்துகிறேன்.

சீனியர் குஷ்பூ - ஜூனியர் குஷ்பூ யார் அழகு?


கண்டிப்பா என்னைவிட குஷ்பூ மேடம்தான் கொள்ளை அழகு. அவங்களமாதிரி ஃபேஷன் அண்ட் மேக் அப் டிப்ஸ் கொடுக்க முடியாது.


உங்கள் அழகின் ரகசியம் கொஞ்சம் சொல்லுங்களேன்?


அம்மா - அப்பா கொடுத்த பரிசு. ஆனால் அழகு பற்றி பேசிப் பெருமைப்பட்டுக்கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனக்குப் பொருந்தும் ஆடைகள் மட்டும் அணிவதே என்னை அழகாகக் காட்டுவதாக நம்புகிறேன். ஆள்பாதி, ஆடை பாதி என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அதனால் ஆடைகளுக்கு அதிகமாகச் செலவழிப்பேன்.


உங்கள் கதாபாத்திரங்களுக்கு வாங்கும் ஆடைகளை உங்களுக்காக எடுத்துக் கொள்வதுண்டா?


ச்சீ... இலவசம் எனக்குப் பிடிக்காது!


சிங்கம் 2 படத்தில் பள்ளி மாணவியாக நடித்தது நியாம்தானா?


22 வயசுதானே ஆகுது. அதுவுமில்லாமல் அந்த டீம்ல நான்தான் சின்ன வயசு. இது பத்தாதா நான் ஸ்கூல் கேர்ளா நடிக்க?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x