Published : 28 Sep 2014 10:03 AM
Last Updated : 28 Sep 2014 10:03 AM

திரை விமர்சனம்: ஜீவா

மட்டையை எடுத்துக்கொண்டு தெரு வில் இறங்கும் கோடிக்கணக்கான சிறுவர்களுக்கு இருக்கும் ஆசைதான் ஜீவாவுக்கும் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரைப் போல ஆக வேண்டும் என்பதுதான் அவன் கனவு. “நல்லா ஆடறி யேடா, யார் கிட்ட கத்துக்கிட்ட?” என்று கேட்கும் ஆசிரியரிடம் “சச்சின் கிட்ட கத்துக்கிட்டேன் சார்” என்று சொல்லும் ஜீவா, கிரிக்கெட் கனவுகளுடனும் தீவிரமான பயிற்சியுடனும் வளர்கிறான்.

ஏழு வயதில் தொடங்கும் அவனது கிரிக்கெட் ஆர்வம், அவன் இளைஞ னாகும்போது காதலால் பெவிலியனுக் குத் திரும்புகிறது. காதல் தோல்வியின் வேதனை கிரிக்கெட் வாசலை மீண்டும் திறக்க வழிசெய்கிறது. கிரிக்கெட்டைத் தொடர்ந்து காதலும் புதுப்பிக்கப்பட, அவன் வாழ்வில் மளமளவென்று வளர்ச்சி. ரஞ்சி அணியில் இடம்பெறும் அவனும் நண்பன் ரஞ்சித்தும் களத்துக்கு வெளியே எதிர்பாராத நெருக்கடியை எதிர்கொள்ள, அவர்கள் கனவுப் பாதை சிதிலமாகிறது. ஆடுகளம் சார்ந்த அவர்களது லட்சியப் பயணத்தில் யாரெல்லாம் விளையாடுகிறார்கள், இறுதியில் லட்சியத்தை அடைய முடிந்ததா என்பதை போரடிக்காமல் சொல்கிறார் இயக்குநர்.

கிரிக்கெட்டில் நடக்கும் ஊழலைப் பற்றிப் பலரும் படமெடுத்துள்ளார்கள். ஆனால் அதில் ஆதிக்கம் செலுத்தும் சாதி உணர்வைப் பற்றி யாருமே பேசிய தில்லை. அதைப் பேசத் துணிந்த இயக்குநர் சுசீந்திரன் பாராட்டுக் குரியவர். நன்றாக விளையாடியவனின் முதுகை அதிகாரி தடவிப் பார்க்கும் காட்சி தமிழ்த் திரையுலகில் இதுவரை காணப்படாதது. “அவர் தட்டிக்கொடுக்கிறார்னு நெனைச்சேன், ஆனா அவர் தடவிப் பார்த்தாருன்னு அப்புறம்தான் புரிஞ்சுது” என்னும் வசனம் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறது. பாதிப்புக்குள்ளான ரஞ்சித் சம்பந்தப்பட்டவரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளில் தெறிக்கும் நியாயமும் புள்ளிவிவரங்களும் யாரையும் யோசிக்கவைக்கும்.

கிரிக்கெட் பற்றிய கதையில் காதல் என்பதையும் கிட்டத்தட்ட இணை கோடாகக் கொண்ட திரைக்கதை அதற் கான காரணத்தையும் கொண்டிருக் கிறது. ஆனால் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அளவுக்கு அதிகமாக நீண்டு பொறுமையைச் சோதிக்கின்றன. பாடல் காட்சிகளும் திரைக்கதையில் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன.

காதல், பிரிவு, பணக் கஷ்டம் போன்றவை புளித்த மாவில் செய்த பண்டங்களாக இருந்தாலும் அதிகாலையிலேயே மைதானத்துக்கு வரும் ஜீவாவுக்கு வாட்ச்மேன் பந்து வீசுவது, ஜீவாவின் சோகத்தை கோச் எதிர்கொள்ளும் விதம், ஜீவாவின் அப்பா குடிப்பதை நிறுத்தும் இடம் என்று சில இடங்கள் மனதைத் தொடும் அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

விஷ்ணு விஷால், கிரிக்கெட் ஆடத் தெரிந்தவர் என்பதால் பாத்திரத்திற் குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். நண்பனை இழந்த துக்கம், புறக்கணிப் பால் வரும் குமுறல் ஆகிய தருணங் களில் நேர்த்தியான நடிப்பு வெளிப் படுகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் சந்தோஷத்தில் சிரித்துக்கொண்டே கண்ணீர் விடும் காட்சியில் கைதட்டலை அள்ளுகிறார். ஆனால் காதல் காட்சி களிலும் பாடல் காட்சிகளிலும் வழக்க மான தமிழ் சினிமா ஹீரோவாக ஆகி விடுவது பலவீனம்.

நண்பனாக வரும் லட்சுமணனும் கவனம் ஈர்க்கிறார். கிரிக்கெட் ஆடும் காட்சிகளிலும் அதிகாரியிடம் வாதிடும் காட்சியிலும் முத்திரை பதிக்கிறார்.

‘அண்ணா.. கொஞ்சம் சக்கரை வேணும்’ என்று பள்ளி மாணவியாகக் கதைக்குள் நாயகி ஸ்ரீதிவ்யா வரும் போது அவரது துறுதுறுப்பும் அழகும் கவர்கின்றன. காதலிப்பது, காதலிக்கப் படுவதைத் தவிர அவருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், பிறகு வேலைக்குச் செல்லும் பருவம் என்று மாறுபட்ட தோற்றங்களில் தன் திறமையைக் காட்டியிருக்கிறார்.

பின்னணி இசையிலும் பாடல்களி லும் புதிதாகக் கேட்பதுபோல் செய்திருக் கிறார் இமான். ஆர். மதியின் ஒளிப்பதிவு படத்துக்கு வண்ணம் சேர்க்கிறது. கிரிக் கெட் காட்சிகள் நன்கு படம்பிடிக்கப்பட் டிருக்கின்றன. பொருத்தமான வசனங் கள் மூலம் கவனம் ஈர்க்கிறார் சந்தோஷ்.

காதலில் தோல்வி என்றால் அதற் குப் பெண்களையே குற்றம்சாட்டும் தமிழ் சினிமாவின் நோய்க்கு சுசீந்திர னும் தப்பவில்லை. யதார்த்தமாகப் படம் எடுக்க முயற்சி செய்பவர்களும் பெண்கள் தரப்பைப் பற்றிக் கவலைப் படாமல் இருப்பது வேதனைக்குரியது.

கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர் கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய துணிச்சலுக்காகவும் அதைச் சுவையான கதையாகச் சொன்னதற்காகவும் சுசீந்தரனுக்கு வாழ்த்துக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x