Published : 19 Dec 2014 07:06 PM
Last Updated : 19 Dec 2014 07:06 PM

சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ஸ் | 20.12.2014 படங்களின் அறிமுகப் பார்வை

சென்னை 12-வது சர்வதேச பட விழாவில் சனிக்கிழமை உட்லண்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களின் அறிமுகக் குறிப்புகள் இவை.

காலை 10 மணி

Marsella / Marseille / Belen Macias / Spain / 2014 / 95'

நான்கு வயதிலிருந்து விர்ஜீனியா எனும் பெண்ணால் க்ளாரே வளர்க்கப்படுகிறாள். போதை பழக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வந்துவிட்டதால் இனி சாரா தன் குழந்தையை வளர்க்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க, சாரா தன் மகளாகிய க்ளாரேவை விர்ஜீனியாவிடமிருந்து அழைத்து வருகிறாள்.

வளர்ப்பு தாயிடமிருந்து பத்து வயது சிறுமி பிரிக்கப்படுகிறாள். சாரா தன் மகளிடம் ‘வா உன்னை அப்பாவிடம் அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறி பயணிக்கத் தொடங்குகிறாள், உணர்ச்சிப் பரிமாற்றம் அரங்கேறுகிறது. பெற்றவளுக்கும், வளர்த்தவளுக்கும், குழந்தைக்கும் இடையே நடக்கும் உணர்ச்சிப் பெருக்கல்கள் தான் இப்படம்.



மதியம் 12 மணி

West/Germany/Christian Schwochow/102’/2013

70களின் கோடைக்காலம். நெல்லி எனும் பெண் தன் கணவன் வெஸ்லி இறந்துவிட தன் குழந்தையை வைத்துக்கொண்டு வாழ முயல்கிறாள். அவளுடைய அரிதான நண்பனும் கார் விபத்தில் இறந்துவிடுகிறான். ஒரு புதிய வாழ்வை நோக்கி அந்த இடத்தைவிட்டே இடம் பெயர்வது என்று முடிவெடுக்கிறாள். ரஷ்ய ஜிடிஆரிலிருந்து மேற்கு நோக்கி வருகிறாள். பெரிய பயணம்தான். கிழக்கு பெர்லினில் வோல்க்ஸ்வேகன் நிறுத்தத்தில் அவளது வீடு இருக்கிறது.

அங்குபோய் சேர்வதற்குள் அவள் பெற்ற அனுபவங்கள் பலப்பல. அவசரகால அகதி மையத்திற்கும், ரஷ்ய கூட்டு ரகசிய சர்வீஸுக்கும் நடந்த பனிப்போரில் ஏற்பட்ட சேதாரம் ஏற்பட்ட அப்பாவி மக்களுக்குத்தான். 'தி டவர்' மற்றும் 'நவம்பர் சைல்டு' ஆகிய இரு நாவல்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். மான்ட்ரியல் 2013 உலகப்படவிழாவில் சிறந்த நடிகைக்கான விருது, அராஸ் 2013 உலகப்படவிழாவில் ஜூரிகளின் சிறப்பு விருது, சிறந்த நடிகைக்கான ஜெர்மன் பிலிம் விருது 2014 பெற்றது.



மதியம் 3 மணி

Playing Dead/France/Jean Paul Salome/104’/2013

ஒரு காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த திரைப்பட நடிகன் ஃபிரான்சிஸ் டாமியன்ஸ் வேலையில்லாமல் இருக்கிறான். இது அவனுக்கு மிகுந்த சலிப்பைத் தருகிறது. அதனால் வேறு வேலை ஏதாவது செய்யலாம் என வேலைக்கு ஆள் எடுக்கும் மையங்களில் தன்னுடைய விவரங்களைத் தருகிறான். அங்கு இவனுக்கு ஒரு வேலை காத்திருக்கிறது.

அவனுக்கான வேலை மிகவும் வித்தியாசமானது. அதாவது, ஒரு கொலைவழக்கின் உண்மையை அறிய வேண்டும். கிட்டத்தட்ட மூன்று கொலைகள் நடந்துள்ளன. அதற்கான கொலைகாரர்களைப் பிடிக்க ஒரு புதிய உத்தி கையாள்கிறார்கள். அதற்கான விசாரணையை முடுக்கிவிட மீண்டும் அந்த கொலைகள் நடப்பதுபோலவும் அதை நேரில் கண்ட சாட்சியாக இந்த முன்னாள் திரைப்பட நடிகர் பிரான்சிஸ் டாமியன்ஸ் நடிக்க வேண்டும். அவ்வளவுதான்.

இதற்காக பிரெஞ்ச் பகுதி ஆல்ப்ஸ் மலையின் உச்சியில் உள்ள ஒரு மலைவாசஸ்தலம் செல்கிறார்கள். அங்கு நடக்கும் சம்பவங்களை படம்பிடிக்கிறார்கள். பிரான்சிஸ் டாமியன்ஸ் ஏற்கெனவே ஒரு நடிகன் என்பதால் உயிரோட்டமாக நடிக்கிறான். ஆனால் மற்றவர்கள் சொதப்புகிறார்கள். ஓரிரு மணித்துளிகளே வரக்கூடிய காட்சிகளுக்கு நீண்டநேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் கடைசியில் ஒரு வேலையும் ஆகவில்லை. அதேநேரத்தில் வழக்கின் திருப்பமாக பல அரிய உண்மைகள் வெளிவருகின்றன. கொலை செய்யப்பட்ட அந்த மூன்று பேரின் கையில்தான் நகரின் பொருளாதாரமே சிக்குண்டு இருந்ததாம். ஒரு பண்ணைத்தொழிலாளி அவர்களைக் கொன்றுவிட்டான் என்ற உண்மை மெல்ல தானாக வெளிவரத் துவங்குகிறது.

குடும்ப ஹோட்டல்கள், குளியல் தொட்டிகள், கேபிள் கார்கள், காடு மலை என அழகியலுக்குப் பஞ்சம் இல்லை. இப்படத்தின் பிரான்சிஸ் டாமியன்ஸாக நடித்துள்ள ஜான் ரெனால்டு நடிப்பு படத்தின் நகைச்சுவைக்கு ஆதார சுருதி. ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.



மாலை 5 மணி

Roseville /Bulgaria/Martin Makariev/120’/2013

பால்கன் மலைப்பிரதேசத்தில் இருக்கும் ரோஸ்வில்லி காட்டில் ஒரு தனி வீடு. அங்கு விடுமுறையைக் கொண்டாட வரும் இளம் தம்பதியரை அந்த வீட்டின் மேலாளரும் அவனது தோழியும் வரவேற்கின்றனர். அந்த வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. யார் கொன்றது என்பதை யாராலும் அறியமுடியவில்லை.

இந்நிலையில் மேலும் திகில் தொடர்ந்திட தொடர்ந்து இன்னொரு கொலை. மிகவும் மர்மமான முறையில் நடற்தேறியுள்ளதால் எல்லோருக்கும் அச்சம் ஒரு பேயைப் போல பிடித்தாட்டுகிறது. நேரில் கண்ட சாட்சியும் இல்லை. யார் என்று யூகமும் சொல்லமுடியாத நிலை. போலீஸ் விசாரணையிலிருந்து உண்மை நழுவிச் செல்கிறது.



மாலை 7.15 மணி

2030 / NUOC / Minh Nguyen-Vo / Vietnam / 2014 / 98'

வியட்னாமிய திரைப்படமான இது ஒரு சுற்றுச்சூழல் த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்தது. எதிர்காலத்தில் நடக்கும் கதை. அதாவது புவி வெப்பமடைதலால் கடல் நீர் மட்டம் அதிகரித்து எங்கும் கடல் நீர் சூழ விவசாயம் என்பது. நீரில் மிதக்கும் பண்ணைகளிலேயே செய்ய வேண்டிய ஒரு நிர்பந்தமாகிறது.

இந்நிலையில் மன உறுதி கொண்ட அந்தப் பெண்மணி தனது மாஜி காதலன் பற்றிய முக்கிய முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாஜி காதலன் தன் கணவனைக் கொன்றவன் என்ற சந்தேகமும் இருக்கிறது. தெற்கு வியட்நாமின் பரந்த, ரம்மியமான கடற்ரைப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் நீரில் மிதக்கும் ஒரு உடலுடன் தொடங்குகிறது...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x