Published : 20 Jun 2014 10:27 AM
Last Updated : 20 Jun 2014 10:27 AM

பாலிவுட் வாசம் : ஜிந்தா பாத்

படங்களில் மட்டுமல்ல, பாலிவுட்டின் நிஜ வாழ்க்கையிலும் பரபரப்பைக் கிளப்பிவிடுபவை ஆதார வீடியோக்கள். தற்போது மும்பை மரைன் டிரைவ் காவல் நிலைய போலீஸார் ஒரு வீடியோவுக்காகப் பேயாக அலைந்து கொண்டிருக் கிறார்கள். அலையவிட்டவர் ப்ரீத்தி ஜிந்தா. ‘தில் சே’ இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு மணி ரத்னம் அறிமுகப்படுத்தினாரே அதே ஜிந்தாதான்.

சட்டம் படித்த ப்ரீத்தி ஜிந்தா பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகி என்ற அந்தஸ்தை இழந்தபிறகு நட்புக்காகச் சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். ஆனால் ஜிந்தாவின் முதன்மைத் தொழில் விளையாட்டு. தனது தோழரும், ஐ.பி.எல். பங்கு தாரருமான நெஸ் வாடியா மீது ஜிந்தா தந்திருக்கும் பாலியல் புகார்தான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட். கடந்த வாரம் பஞ்சாப், சென்னை அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்.போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்தது. அப்போது தன் மீது ஆபாச வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தது மட்டுமல்லாமல், வாடியா தனது கரங்களைப் பிடித்து முறுக்கியதாகவும் கொந்தளித்திருக்கிறார்.

வாடியாவோ ‘இது அடிப்படையோ ஆதாரமோ இல்லாத புகார்’ என மறுத்திருக்கிறார்.

தனது நீண்டகால நண்பர் மீது இப்படியொரு புகாரா என்று பாலிவுட் ஆச்சரியப்பட, இன்னொருபக்கம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருக்கும் இடத்தில் இப்படி ஒரு செயலில் வாடியா ஈடுபட்டிருப்பாரா? அப்படி நடந்திருந்தால் மைதானத்தில் பொருத்தப்பட்டிருக்கும் வீடியோவில் பதிவாகி இருக்கும் அல்லவா என்று சமூக வலைதளங்களில் விவாதித்துவருகிறார்கள். இன்னொரு பக்கம் பாலிவுட் நட்சத்திரங்களாவது ஜிந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவார்களா என்று பார்த்தால் ஊடகத்தினரைப் பார்த்தாலே ஓட்டமெடுக்கிறார்கள் நட்சத்திரங்கள். மற்றொரு ஐ.பி.எல். அணியின் உரிமையாளரான ஷாருக் கானிடம் இதுபற்றி ஒரு செய்தியாளர் கேட்டதற்குப் பதிலளிக்காமல் டான்ஸ் ஆடி, “எங்கிட்ட கேட்பியா? கேட்பியா? ” என்பதுபோல நடந்துகொண்டாராம்.

ஜிந்தாவின் புகாருக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டாலும், போட்டி நடந்தபோது பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி) வீடியோ ஆதாரங்களை சேகரித்து வரும் போலீஸார் வாடியா மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் வாடிய முகத்துடன் வேறு ஆதாரங் களைத் தேடி வருகிறார்கள். ஜிந்தா தந்திருப்பது போலிப் புகாரா அல்லது வாடியா உண்மையில் அவ்வாறு நடந்து கொண்டாரா என்பது கிடைக்கும் ஆதாரத்தைப் பொறுத்தே அமையும். அதுவரை ஜிந்தாவின் ஜிந்தாபாத் கோஷம்தான் பாலிவுட்டுக்குச் சூடு ஆறாத பரபரப்பு சூப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x