Published : 24 Oct 2016 11:58 AM
Last Updated : 24 Oct 2016 11:58 AM

அமுல் பேபி 50

இந்தியாவில் `வெண்மை புரட்சியை’ கொண்டுவந்த மிக முக்கியமான நிறுவனம் அமுல். இந்தியாவில் பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து அனைத்து மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான பால் கிடைக்க செய்ததில் அமுல் நிறுவனத்தின் பங்கு மிகப் பெரியது. இன்று அமுல் நிறுவனம் ஒரு நாளைக்கு 1 கோடி லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பு, பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் உயருகிறது. அதுமட்டுமல்லாமல் தனது பொருட்களை விளம்பரப்படுத்துவதில் அமுல் நிறுவனம் தனித்து செயல்பட்டு வருகிறது.

`அமுல் பேபி’ என்ற குட்டி பெண் ஓவியத்தை வரைந்து அதன் மூலம் தனது பொருட்களை விளம்பரப்படுத்தி வருகிறது. அமுல் பேபி விளம்பரம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. தனது பொருட்களை மட்டும் விளம்பரப்படுத்தாமல் சமூக அக்கறையுடன் சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் அரசியல் நிகழ்வுகளையும் அமுல் பேபி ஓவியம் மூலம் கூறிவருகிறது. சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் வரை அமுல் பேபி ஓவியங்கள் வந்துள்ளன. அமுல் நிறுவனத்தை பற்றியும் அமுல் பேபி விளம்பரம் பற்றிய சில தகவல்கள்……



# 1946-ம் ஆண்டு அமுல் நிறுவனம் தொடங்கப்பட்டது.

# `அமுல்யா’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்தே அமுல் என்ற பெயர் வைக்கப்பட்டது.

# அமுல் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் என்ற மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.

# அமுல் நிறுவனத்தை தொடங்கியவர் டாக்டர் வர்க்கிஸ் குரியன். இவர் இந்தியாவின் `மில்க் மேன்’ என்று அழைக்கப்படுகிறார்.

# கடந்தவருடம் இவரது 94-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் டூடுல் வெளியிட்டது.

# ஆசியாவிலேயே மிகப் பெரிய சங்கிலி சந்தையை வைத்துள்ள நிறுவனம் அமுல். அமுல் நிறுவனத்திற்கு 48 விற்பனை மையங்களும் 5000 மொத்த விற்பனையாளர்களும் உள்ளனர். 7 லட்சம் ரீடெய்ல் விற்பனையாளர்கள் உள்ளனர்.

# அமுல் பேபி விளம்பரம் தமிழ், குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி என பல்வேறு மொழிகளில் வருகின்றன.

# அமுல் நிறுவனத்தில் தற்போது 750 மார்க்கெட்டிங் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

# 36 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அமுல் நிறுவனத்திடம் பால் விற்பனையை செய்து வருகிறார்கள்

# 2014-15-ம் ஆண்டு தகவலின் படி அமுல் நிறுவனத்தின் வருமானம் 3,500 கோடி

# ஐஸ்கிரீம், பனீர் என 20 வகைகளில் அமுல் தயாரிப்புகள் தற்போது சந்தையில் உள்ளன.

# தற்போது அமுல் நிறுவனம் வைத்துள்ள சந்தை

வெண்ணெய் - 85%

குழந்தைகளுக்கான பால் - 63%

பேக்கேஜ் பால் - 26%

சீஸ் (பாலாடைக்கட்டி) - 65%

# 1966 - அமுல் நிறுவனம் தனது வெண்னெய் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில் சில்வெஸ்டர் சஹுனா (Sylvester dachunha) என்பவரை விளம்பர பிரிவுக்கு நிர்வாக இயக்குநராக நியமித்தது. அவர் தலைமையிலான குழு அமுல் பேபியை வடிவமைத்தது. மூக்கில்லாத சிறு குழந்தை அமுல் தயாரிப்பை வைத்திருப்பது போல் வரையப்பட்டது. இந்த ஒவியத்தை பல்வேறு இடங்களில் ஓவியமாக வரைந்து பிரபலப்படுத்தினர்.

# அரசியல் நிகழ்வுகளையும் சமுதாய நிகழ்வுகளையும் மையப்படுத்தி அமுல் பேபி ஓவியம் வர ஆரம்பித்தது. முக்கியமாக அவசர நிலையின் போது அமுல் பேபி ஓவியங்கள் வரையப்பட்டன.

# இந்திய ஏர்லைன்ஸ், விநாயகர் சதுர்த்தி ஆகியவற்றை மையப்படுத்தி அமுல் பேபி விளம்பரம் வந்தது அந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.

# காமன்வெல்த் ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜூ ஆகியோரை விமர்சித்து வந்த ஓவியங்கள் அப்போது பிரபலமாக பேசப்பட்டன.

# அமுல் தொலைக்காட்சிகளிலோ செய்திதாள்களிலோ அவ்வளவாக பெரிதாக விளம்பரம் கொடுப்பதில்லை. அமுல் பேபி ஓவியங்கள் பொது இடங்களில் வைக்கப்படுகின்றன.

# 1966-ம் ஆண்டு முதல் விளம்பரம் அமுல் பேபி குதிரையில் செல்வது போல் வரையப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.

# 1966-70 ஆண்டுகளில் மாதம் ஒரு முறை அமுல் பேபி விளம்பரம் வந்தது.

# 1970-1980 ஆண்டுகளில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமுல் பேபி விளம்பரம் வந்தது. பின்பு வாரம் ஒரு முறையும் தற்போது வாரத்திற்கு ஐந்து விளம்பரங்கள் வருகின்றன.

# அமுல் நிறுவனம் சமூக வலைதளங்களில் இந்த விளம்பரங்களை பிரபலப்படுத்தி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x