Published : 16 Oct 2017 10:32 AM
Last Updated : 16 Oct 2017 10:32 AM

இந்திய தயாரிப்பு: வோல்வோ தீவிரம்

ந்தியாவில் கார்களை தயாரிக்கும் திட்டத்தை (மேக் இன் இந்தியா) செயல்படுத்துவதில் ஸ்வீடனின் வோல்வோ நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த வாரம் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய வோல்வோ 90 எக்ஸ்சி மாடல் கார் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதாகும். பெங்களூருவில் உள்ள ஆலையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

சொகுசு கார் பிரிவில் இந்தியாவின் விற்பனை வாய்ப்பு அதிகரித்து வருவதால் தங்களது தயாரிப்புகளை அதிகம் அறிமுகம் செய்ய நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் சொகுசு கார் பிரிவில் 10 சதவீத சந்தையைப் பிடிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்புதிய மாடலைத் தொடர்ந்து மேலும் பல புதிய மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யும் திட்டமும் உள்ளதாக வோல்வோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள சார்லஸ் பிரம்ப் தெரிவித்துள்ளார்.

வோல்வோ எக்ஸ்சி 90 மாடலை தொடர்ந்து எஸ் 90 மற்றும் அடுத்த தலைமுறை எக்ஸ்சி 60 ஆகிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொதுவாக உள்நாட்டில் அசெம்பிள் செய்து விற்கப்படும்போது வெளிநாட்டு கார்களின் விலை கணிசமாகக் குறையும். ஆனால் வோல்வோ நிறுவனத் தயாரிப்புகளைப் பொறுத்தமட்டில் இவற்றின் விலை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதால் உள்நாட்டில் அசெம்பிள் செய்வதால் பெருமளவு விலை வித்தியாசம் இல்லை.

தற்போது இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு நாடு முழுவதும் 17 விநியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 30 ஆக உயர்த்தும் திட்டமும் இந்நிறுவனத்துக்கு உள்ளது. 2019-ம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய மாடல் கார்கள் அனைத்துமே பேட்டரியில் இயங்குபவையாக இருக்கும் என்று பிரம்ப் தெரிவித்துள்ளார்.

`மேக் இன் இந்தியா’ திட்டம் வோல்வோ கார்களுக்கு உரிய சந்தையை இந்தியாவில் பெற்றுத் தரும் என நிச்சயம் நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x