Published : 11 Sep 2017 11:08 AM
Last Updated : 11 Sep 2017 11:08 AM

பேட்டரி கார்: ஆர்வம் காட்டும் 6 நிறுவனங்கள்

சூ

ழல் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. 2030-ம் ஆண்டில் அனைத்து வாகனங்களும் பேட்டரியில் இயங்குபவையாக இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதன் முதல் கட்டமாக 10 ஆயிரம் வாகனங்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய பேட்டரி கார்களை மத்திய அரசுக்கு அளிக்க 6 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.

இத்தகைய பேட்டரி கார்களுக்கு தேவையான ஊக்க சலுகைகளை அளிப்பது தொடர்பான கொள்கை முடிவுகளை மத்திய அரசு தீட்டி வருவதும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் ஆர்வத்துக்கு முக்கியக் காரணமாகும்.

டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், நிசான், ரெனால்ட், மாருதி சுஸுகி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பேட்டரி கார்களை மத்திய அரசுக்கு சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளன.

இந்நிறுவனங்கள் அனைத்துமே அரசு உத்தேசித்துள்ள 10 ஆயிரம் வாகனங்களுக்கான டெண்டரில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக எரிசக்தி சேமிப்பு சேவை நிறுவனத்தின் (இஇஎஸ்எல்) நிர்வாக இயக்குநர் சவுரப் குமார் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதத்திலிருந்து பேட்டரி கார்களை இந்நிறுவனங்கள் வழங்க வேண்டியிருக்கும். ஆறு மாதங்கள் முதல் 8 மாதங்களுக்குள் பேட்டரி கார்களை வழங்க வேண்டியிருக்கும்.

4 ஆயிரம் பேட்டரி சார்ஜர்கள்

பேட்டரி கார்களுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்கவும் திட்டமிட்டு 4 ஆயிரம் பேட்டரி சார்ஜிங் நிறுவனங்களையும் உருவாக்க உள்ளன. இதுதவிர இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 50 ஆயிரம் பேட்டரி ஆட்டோ ரிக்ஷாக்களை வாங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பேட்டரியில் இயங்கும் பஸ்களுக்கு டெண்டர் கோரவும் அரசு திட்டமிட்டுள்ளது. 15 மாதங்களில் 10 ஆயிரம் பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேட்டரி வாகனங்களை சாலைகளில் இயக்கவும் முடிவு செய்துள்ளது. இஇஎஸ்எல் மூலமாக எல்இடி பல்புகளை முற்றிலுமாக மாற்றும் அரசின் திட்டம் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. அதே அடிப்படையில் பேட்டரி வாகனங்களை படிப்படியாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

பேட்டரி கார்களை வாங்கும் அரசின் முடிவானது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. முதலில் 500 கார்களை வாங்கி அதை டெல்லி என்சிஆர் பிராந்தியத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஆயிரம் கார்கள் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போதைக்கு மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மட்டுமே பேட்டரி கார்களைத் தயாரிக்கிறது. இதனால் வாங்கும் இலக்கு 500 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

பேட்டரி கார்களுக்கான டெண்டர் செப்டம்பர் 25-ல் வெளியிடப்பட்டு 30-ம் தேதி முடிவடைகிறது. நவம்பர் 15-ல் வாகனங்கள் சாலைகளில் புழக்கத்துக்கு வர வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குமார் தெரிவித்தார்.

பேட்டரி கார்களாக மாற்றும் அரசின் முடிவு ஆட்டோமொபைல் துறையினரை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூழல் பாதுகாப்பு நடவடிக்கை ஆட்டோமொபைல் துறையில் பெருகி வருவது நல்லதுதானே.!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x