Published : 04 Sep 2017 10:11 AM
Last Updated : 04 Sep 2017 10:11 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதா?

ந்தப் பொருளின் விலையும் அதிரடியாக உயர்ந்தால் அதற்கு கடுமையான எதிர்ப்பு இருக்கும். அரசியல் கட்சிகள் இதையே காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் எதிர்ப்பை நிலைநாட்டுவதும் வாடிக்கை. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டபோதெல்லாம் நாடெங்கும் எதிர்ப்புக் கோஷம் கிளம்பியது. ஆனால் இப்போதோ இது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

சூரியன் காலையில் உதித்து மாலையில் மறைவதைப் போல பெட்ரோல் டீசல் விலையும் அன்றாட சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கேற்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 15-ம் தேதிக்கு முன்பு வரை 15 தினங்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்தன. ஆனால் இப்போது தினசரி விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை நிலவரம் போல அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை 1-ம் தேதியிலிருந்து இதுவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 5.64 ரூபாய், டீசலுக்கு லிட்டருக்கு 3.72 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.

முன்பு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 5 உயர்த்தப்படுகிறது என்று அறிவிப்பு வெளியானால், அதற்கு ஏற்படும் எதிர்ப்பை நினைத்துப் பாருங்கள். ஆனால் இப்போது படிப்படியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜூலை 3-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 65.56 ஆக இருந்தது. ஆகஸ்ட் 31-ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 71.70 ஆக உள்ளது. இரண்டு மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 6.14 உயர்ந்துள்ளது.

இதேபோல ஒரு லிட்டர் டீசல் விலை ஆகஸ்ட் 31-ம் தேதி ரூ. 60.10 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஜூலை 3-ம் தேதி ஒரு லிட்டர் டீசல் ரூ. 56.33 என்ற விலையில் விற்பனையானது.

பொதுவாக மிகவும் அத்தியாவசிய பொருள் வரிசையில் சேர்ந்துவிட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். குறிப்பாக அனைத்து உணவுப் பொருள்களும் லாரிகள் மூலமே ஓரிடத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. டீசல் விலை ஏறினால் அதன் தொடர் விளைவாக உணவுப் பொருள் விலையும் உயரும். தினசரி கொஞ்சம் கொஞ்சமாக விலையை உயர்த்தி இப்போது லிட்டருக்கு பெட்ரோல் விலை ஏறக்குறைய ரூ. 6-ம், டீசலுக்கு ரூ. 4 வரையிலும் உயர்த்தியுள்ளனர்.

சர்வதேச விலை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கலாம். சிறிது சிறிதான உயர்வு கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அதன் சுமை சாதாரண மக்களை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும். மாநில அரசுகள் வரியைக் குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகமிருக்காது என முன்னர் மத்திய அரசு கூறிவந்தது.

நாடு முழுவதும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்த பிறகு இந்த வரிப் பட்டியலில் பெட்ரோல், டீசல் இடம்பெறவில்லை.

வரி விதிப்புக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 31.20 மட்டுமே. இதற்கு 28 சதவீத வரி விதித்தால்கூட ஒரு லிட்டர் ரூ. 45-க்குக் கிடைக்கும். இதை அரசு செய்தாலே விலைவாசி உயர்வை தடுக்கலாம்.

பெட்ரோல், டீசலின் தினசரி விலையேற்றம் இந்த திருக்குறளைத்தான் நினைவுபடுத்துகிறது

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்"

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x