Last Updated : 05 Oct, 2015 12:09 PM

 

Published : 05 Oct 2015 12:09 PM
Last Updated : 05 Oct 2015 12:09 PM

24 கோடி மாணவர்கள் முன்னேற வாய்ப்பு தாருங்கள் இரானி!

மாணவர்களின் அறிவியல் கணித அறிவைச் சோதிக்க சர்வதேச அளவில் 2011-ல் நடந்த தேர்வில், மொத்தம் 74 நாடுகள் பங்கேற்றன; அறிவுலக மேதைகளைக் கொண்ட இந்தியா அதில் 73-வது இடத்தைப் பெற்றது! நல்லவேளை கிர்கிஸ்தான் நம்மைவிட மோசமாக இருந்ததால் நமக்குக் ‘கடைசி இடம்’ என்ற கவுரவம் கிடைக்காமல் போனது.

இந்தப் போட்டியில் இந்தியா விலிருந்து பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு வயது 15. இந்திய மாணவர்கள் ஏன் இப்படி மோசமாக இருந்தார்கள் என்ற கேள்வியை இப்போது மனித வளத்துறை அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி கேட்டு, இந்த நிலையை மாற்றவும் இந் நாட்டின் 24 கோடி குழந்தைகளின் எதிர்காலத் தைத் திருத்தியமைக்கவும் முன்வர வேண்டும்.

ஆசிரியர்கள் நிலை படுமோசம்

ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் மாணவர்களின் படித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற திறன்களை நேரில் சோதித்து அறிக்கை தரும் (ஆசர்) ஆய்வு முறை நடைமுறையில் இருந்தும் நம்முடைய மாணவர்களின் தரம் இவ்வளவு மோசமா என்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிப்பேரால்தான் இரண்டாவது வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களைப் படிக்க முடிகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 25% ஆசிரியர்கள்தான் தேர்ச்சி பெற்றனர். உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த ஆசிரியர்களில் நான்கில் மூன்று பேரால் ஐந்தாவது வகுப்புக்குரிய சதவீதக் கணக்கைக் கூடப் போட முடியவில்லை!

அனைவருக்கும் எழுத்தறிவுத் திட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு செலவழித்தும்கூட நம்முடைய கல்வித்தரம் சமீபகாலமாக தாழ்ந்துகொண்டே வருகிறது.

ஏழைகளாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளை இலவசக் கல்வி தரும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு பதிலாக, கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் ஏன் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள்? ஏதோ ஒரு சில பெற்றோர்தான் தெரியாமல் தவறு செய்கிறார்கள் என்றால் விட்டுவிடலாம்; நாடு முழுக் கவும் இதேதான் நிலைதான் அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள்கூட தங்க ளுடைய குழந்தைகளைத் தனியார் பள்ளிக் குத்தான் அனுப்புகின்றனர்.

காரணம் என்ன?

பள்ளிக்கூடங்களுக்கு அதிக மாணவர்கள் வராததைப்பற்றி மட்டுமே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவலைப்பட்டது. எனவே 2009-ல் ‘கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை’ இயற்றியது. ஆனால் 2009-ல் ஏற்கெனவே 96.5% மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் படித்தனர். உண்மையான பிரச்சினை அவர்களுடைய கல்வியின் தரம் பற்றியது. கல்விபெறும் உரிமைச் சட்டமானது ஆசிரியர்களின் தரம் பற்றியும் விளைவுகள் குறித்தும் மவுனம் சாதித்தது.

குழந்தைகளின் கற்றல் திறனைச் சோதிப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் என்று தவறாக நினைத்தது. மாணவர்களைச் சோதிப் பதே சட்டவிரோதம் என்றது. தேர்வே இல்லாமல் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் எந்தப் பாடத்தில் கெட்டி, எதில் மக்கு என்று எதுவுமே தெரியாமல் போனது. ஆண்டுதோறும் தேர்ச்சி நிச்சயம் என்பதால் ஆசிரியர்களுக்கும் அக்கறையோடு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இதிலிருந்துதான் அரசுப் பள்ளிகளின் தரம் வேகமாக சரியத் தொடங்கியது.

அரசு பள்ளிக்கூடங்களின் தரத் தைக் கூட்டுவதற்குப் பதிலாக ஊழல் மிகுந்த ‘இன்ஸ்பெக்டர் ராஜ்யத்தை’ கல்விபெறும் உரிமைச் சட்டம் தொடங்கி வைத்தது. இதனால் பல அரசுப் பள்ளிக்கூடங்களை மூட நேர்ந்தது. பஞ்சாப் ஹரியாணா உயர் நீதிமன்றம் இதில் முதலில் தலையிட்டது. தனியார் பள்ளிக் கூடங்களில் 25% இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தனியார் பள்ளிகள் மாற்றாந் தாய் போக்கில் அவர்களை நடத் தியது.

ஸ்மிருதி இரானியின் முயற்சி

இந்தப் பிரச்சினையில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இப்போது கவனம் செலுத்துவது நம்பிக்கையை ஊட்டு கிறது.

கல்வித்தரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி யாளர்கள் என்று எல்லா தரப்பாரிடமும் கருத்துகளைக் கேட்டிருக்கிறார். நாட்டின் இப் போதைய 24 கோடி மாணவர்களின் கல்வித் தரத்தைக் காக்க, ஸ்மிருதி எடுக்க வேண்டிய 6 நடவடிக்கைகள் இவை:

1. அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் குறைவதற்கு முக்கிய காரணம் அவை நிர்வகிக்கப்படும் விதம்தான். ஒரு பள்ளிக்கூடத்துக்கு 4 ஆசிரியர்கள் என்றால் அவர்களில் 2 பேர் வருவதில்லை. வந்த இருவரில் ஒருவர் பாடம் நடத்துவதில்லை.

2. பள்ளிக்கூடத்தில் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற கவனத்தைக் குறைத்துக் கொண்டு, தரமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்த வேண்டும். குஜராத்தில் கடைப் பிடிக்கப்படும் ‘குணோத்சவ்’ என்ற நடைமுறையை நாடே பின்பற்றலாம். அங்கு மாணவர்களின் கல்வித் திறன் தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.

3. பள்ளிக்கூடத் தலைமை ஆசிரி யர்களைப் பணி மூப்பு அடிப்படையில் மட்டும் நியமிப்பதைக் கைவிட வேண்டும்.

ஆசிரியர்களுக்குத் தரப்படும் ஊதியம் மேம்பட்டிருக்கிறது; இருந் தாலும் மாணவர்களுக்கு அவர்கள் கற்றுத்தரும் திறனைப் பொருத்து ஊக்குவிப்புகளும் வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களை உருவாக்கும் பயிற்சி மையங்கள் மூன்றாந்தரத்தில் இருக்கக் கூடாது. நாட்டின் முன்னணி பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும்.

4.தனியார் பள்ளிக்கூடங்களை, ‘ஆய்வு’ என்ற பெயரில் அலைக் கழித்து பணம் பெறுவது மட்டும் நோக்கமாக இருக்கக்கூடாது. அங்கும் தரமான ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி அளிக்கப்பட வழிகாட்ட வேண்டும்.

5. சிலி, சிங்கப்பூர், சுவீடன், பிரேசில், போலந்து போன்ற நாடுகளிலும் கல்வியின் தரம் ஒரு காலத்தில் மிகவும் தாழ்ந்துதான் இருந்தது. அவர்கள் கல்வியைச் சீர்திருத்த அக்கறையுடன் எடுத்த நடவடிக் கைகளால் இன்று தலைசிறந்து விளங்குகின்றன. இந்தியா அவர் களிடம் பாடம் கற்கலாம்.

6. கல்வித்துறை என்று இருந்ததை மனிதவளத்துறை என்று பெயர் மாற்றியதோடு சரி, அதில் வேறெந்த அக்கறையையும் முன்பிருந்த மத்திய அரசு காட்டவில்லை.

ஐ.ஐ.டி. மீதுள்ள அக்கறையை ஸ்மிருதி இரானி குறைத்துக்கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் களை முக்கியப் பதவிகளில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும். கல்லூரிகளில் சம்ஸ்கிருதத்தையும் வேத கணிதத்தையும் புகுத்தியே தீருவது என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மேலே கூறப்பட்ட 6 யோச னைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் 24 கோடி மாணவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவதுடன் ஸ்மிருதி இரானியும் புகழை அடையலாம்.

24 கோடி மாணவர்கள் முன்னேற

குழந்தைகளின் கற்றல் திறனைச் சோதிப்பது அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தரும் என்றும் அவர்களை சோதிப்பதே சட்டவிரோதம் என்ற எண்ணத்தாலும் தேர்வே இல்லாமல் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டார்கள். பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகள் எந்தப் பாடத்தில் கெட்டி, எதில் மக்கு என்று எதுவுமே தெரியாமல் போனது.

gurcharandas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x