Published : 08 May 2017 09:51 AM
Last Updated : 08 May 2017 09:51 AM

`ஸ்கார்பியோ’ ஆட்டோ டிரைவருக்கு `சுப்ரோ’ பரிசு!

வாகனங்களில் தங்களுக்குப் பிடித்தமான வகையில் மாற்றங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம். ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் மேற்கொண்ட மாற்றம் இந்திய அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு அவருக்கு பரிசையும் பெற்றுத் தந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் மேற்கொண்ட மாற்றம் பலரையும் கவர்ந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் மிகப் பிரம்மாண்டமான ஸ்கார்பியோ காரைப் போன்று இவர் தனது ஆட்டோவில் மாற்றம் செய்திருந்தார். இதைப் பார்த்த பலரும் இது குறித்து சமூக வலை தளங்களில் செய்திகளைப் பகிர்ந்தனர். இந்த ஆட்டோவின் பின்பகுதி பார்ப்பதற்கு அப்படியே மஹிந்திரா ஸ்கார்பியோவைப் போல இருந்தது.

இந்த விஷயம் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கும் சென்றது. ஆட்டோ ஓட்டுநரைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டால் அவரைப் பாராட்ட வசதியாக இருக்கும் என ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆட்டோ ஓட்டுநரின் பெயர் சுநீல் என்பதும் அவரைப் பற்றிய விவரங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.

உடனே சுநீலுக்கு பாராட்டு விழா நடத்தி அவருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் மினி டிரக் சுப்ரோவை பரிசாக வழங்கி சுநீலின் திறமையைப் பாராட்டினார். இவ்விதம் மாற்றம் செய்யப்பட்ட ஆட்டோ மஹிந்திரா அருங்காட்சியகத்தில் இடம்பெறும்.

மூன்று சக்கர ஆட்டோவை பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக அவருக்கு நான்கு சக்கர டிரக் பரிசாக அளிக்கப் பட்டுள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x