Published : 10 Jul 2017 11:13 AM
Last Updated : 10 Jul 2017 11:13 AM

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் திசை மாறுகிறதா?

சமீப காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை இழப்புகள் அதிகம் நடந்து வருகின்றன. 6 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது. டெக் மஹிந்திரா நிறுவனம் 1,000 பணியாளர்களை நீக்கம் செய்தது. இதுபோன்ற பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தன. இந்தியாவில் மட்டுமே இப்படி நினைத்தால் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கடந்த வாரத்தில் 3,000 முதல் 4,000 பணியாளர்கள் வரை நீக்க முடிவு செய்திருக்கிறது. பல அறிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த பணி நீக்கம் செய்வதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அமெரிக்காவில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்றுஆண்டுகளாகவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணி நீக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2015-ம் ஆண்டு 18,000 ஊழியர்களை நீக்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் ஃபிரண்ட்லி மென்பொருள் நிறுவனமாக மாற்றுவதனால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக நிறுவனம் அறிவித்திருந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ஸ்மார்ட் போன் விற்பனை மந்தமாகியதால் சில ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

தற்போது மீண்டும் 3,000 முதல் 4,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது. சர்வதேச விற்பனை பிரிவில் உள்ள பணியாளர்களை தற்போது நீக்க இருக்கிறது. பிஸிகல் சாஃப்ட்வேர் துறையில் விற்பனையை குறைத்து கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அதிக கவனம் செலுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால் பணி நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நிறுவனத்தின் கமர்ஷியல் விற்பனையை இரண்டு பிரிவுகளாக பிரிக்க இருக்கிறது. அதாவது மிகப் பெரிய வாடிக்கையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்கள் என பிரிக்க இருக்கிறது. மாடர்ன் வொர்க்பிளேஸ், பிஸினஸ் அப்ளிகேஷன், அப்ளிகேஷன் மற்றும் உள்கட்டமைப்பு, தகவல் சேமிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு என நான்கு பிரிவுகள் தொடர்பான சாஃப்ட்வேர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தற்போது ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறை சார்ந்த சாஃப்ட்வேர்களை விற்பதில் மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆல்பபெட் போன்ற நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

வாடிக்கையாளர்களுக்குபுதிய தொழில்நுட்பங்களை கொண்டு செல்வதற்கு திறன்வாய்ந்த விற்பனையாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் காரணமாகத்தான் தற்போதுள்ள ஊழியர்களில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் இன்னும் எத்தனை ஊழியர்களின் வாழ்வு கேள்வி குறியாக போகிறதோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x