Last Updated : 02 Nov, 2015 10:17 AM

 

Published : 02 Nov 2015 10:17 AM
Last Updated : 02 Nov 2015 10:17 AM

குறள் இனிது: பணிந்தவரெல்லாம் பயந்தவரல்லர்!

பரசுராமன் எனும் எனது நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய வங்கியின் கோட்ட மேலாளர். அது சமயம் கணேசன் எனும் மற்றொரு நண்பர் அதே வங்கியின் சென்னையில் மிகப் பெரிய கிளையின் மேலாளர். (பெயர்களை மாற்றாமல் இருப்பேனா?). பதவியை பொறுத்தவரை இருவரும் துணைப் பொது மேலாளர்களே. ஆனால் அலுவலக ரீதியாக கணேசன் பரசுராமனுக்கு ரிப்போர்ட் செய்ய வேண்டும்.

கிளைக்கு பணியாளர்களை அமர்த்துவது, அவர்களை இடமாற்றம் செய்வது, கிளையின் செலவினங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது எனப் பல வேலைகளுக்கு கணேசன் பரசுராமனைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன், கணேசனுக்கு விடுமுறை வேண்டுமென்றாலும் வெளியூர் செல்ல வேண்டுமென்றாலும் கூட பரசுராமனின் அனுமதி பெறவேண்டும். பரசுராமனோ தன்னால் முடிந்தவரை இவற்றைத் தாமதப்படுத்தி தனது முக்கியத்துவத்தைக் காட்டுவார். தேவையற்ற கேள்விகளை எழுப்பி எரிச்சல் மூட்டுவார். தமக்கு மற்றவர்கள் பயப்படுவதாக எண்ணி மகிழ்வார்!

கணேசனுடன் பணிபுரிந்த மற்ற சக பணியாளர்களுக்கும் இது பிடிக்கவில்லை. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளக் கூடாதென நினைத்தனர். கணேசனிடம் அவர் பரசுராமனின் விளையாட்டுகளை எதிர்த்து நிற்க வேண்டும், என்னதான் நடக்கிறது பார்த்துவிடலாம் என்கிற ரீதியில் பேசினர். ஆனால் கணேசனோ ‘தற்பொழுது பரசுராமனிடம் அதிகாரம் இருக்கிறது. சின்னச்சின்ன தொந்தரவுகள்தானே. நீங்கள் இதில் எனக்கு ஆதரவு காட்டுகின்றீர்கள் என்றால் உங்களுக்கும் தொல்லை கொடுப்பார். நாம் பொறுமையாக இருப்போம். நாம் பணிந்து போவதால் பயப்படுகிறோம் என்று அர்த்தமில்லை’, என்பார்.

சில மாதங்களுக்குப் பிறகு பொது மேலாளருக்கான பதவி உயர்வுக்கு நேர்முகத்தேர்வு வந்தது. இருவரும் சென்றனர்... பதட்டப்படாதீர்கள்.... இருவருமே தேர்வாயினர்! தலைமையகத்திற்கு மாற்றப்பட்டனர்!!. கணேசனுக்கு உடனடியாகவும், பரசுராமனுக்கு நான்கு மாதங்கள் கழித்தும் உயர்பதவி என முடிவு வெளியானது. விதி விளையாடியது! பரசுராமனுக்கு கணேசனிடம் ரிப்போர்ட் செய்யவேண்டிய கட்டாயம்!! மனிதர் நொந்துவிட்டார்.

கணேசன் சும்மா இருந்தாலும் அவரது பணியாளர்கள் பரசுராமனை ஏளனமாகப் பார்ப்பதும் எதுவும் சொல்லாமலேயே கிண்டலடிப்பதுமாக இருந்தனர். உண்மையிலேயே வேலையிருந்து தம்மைக் காக்க வைத்தாலும் கூட பழசை மனதில் வைத்துக்கொண்டு அவர் தம்மை பழிவாங்குவதாக எண்ணிஎண்ணிப் பரசுராமன் புழுங்கினார்.

தனக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து செல்க; அவர்களுக்கு முடிவுகாலம் வரும்பொழுது அவர்கள் தலை கீழே விழும் என்கிறார் வள்ளுவர்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்குஆம் தலை - குறள்: 488

somaiah.veerappan@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x