Published : 23 Nov 2015 10:41 AM
Last Updated : 23 Nov 2015 10:41 AM

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேட்டரி காரில் சாகசப் பயணம்

முதல் முறையாக பேட்டரி காரில் சாகசப் பயணம் மேற்கொண்டுள்ளனர். மஹிந்திரா நிறுவனத்தின் இ2ஓ காரில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு சாகசப் பயணத்தை கடந்த வாரம் தொடங்கியுள்ளனர். இது மொத்தம் 5 ஆயிரம் கிலோமீட்டர் பயணமாகும்.

இத்தகைய நீண்ட தொலைவு பயணத்தை பேட்டரி காரில் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். மஹிந்திரா இ2ஓ கார்களின் நல்லெண்ண பயணம் என சாகச பயணத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நாளைய தினம் நன்றாக அமைய என்ற பிரசார முழக்கத்துடன் புகையில்லா சூழல் காப்புப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் கார்களின் சாதக அம்சங்கள், பசுமையான சூழலை உருவாக்குவது உள்ளிட்டவை இந்த பயணத்தில் வலியுறுத்தப்படும் சிறப் பம்சங்களாகும்.

அனைத்துக்கும் மேலாக பேட்டரி காரின் செயல்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் தவறான அபிப்ராயங்கள் மற்றும் காரின் செயல்திறனை விளக்குவதற்காகவும் இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுற்றுச்சூழல் காப்புடன் தங்களது பயணத்தை மேற்கொள்ள இதுபோன்ற பேட்டரி கார்கள் எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை விளக்கவே இந்த நீண்ட பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மஹிந்திரா ரேவா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்விந்த் மாத்யூ தெரிவித்துள்ளார்.

மொத்தம் 3 பேர் மஹிந்திராவின் ரேவா இ2ஓ கார்களை ஓட்டிச் செல்கின்றனர். நவம்பர் 16-ம் தேதி தொடங்கி டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த சாகச பயணம் தொடரும்.

காஷ்மீரில் தொடங்கி டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, புணே, ஹைதராபாத், பெங்களூர் வழியாக தமிழகத்தின் கன்னியாகுமரியை இந்தக் கார் அடையும்.

மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களை தயாரிக்கும் பணியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் பேட்டரியில் இயங்கும் கார் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாகும். இந்தி யாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூரைச் சேர்ந்த மெய்னி குழுமம் பேட்டரி காரான ரேவா தயாரிப்பில் ஈடுபட்டது. இந்த கார் நிறுவனத்தை கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் கையகப்படுத்தியது.

இதுவரையில் அவ்வளவாக பிரபலமாகாமல் இருந்த ரேவா கார் களை பிரபலப்படுத்துவது மற்றும் அதன் விற்பனையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. அதற்கு இந்த சாகச பயணம் நிச்சயம் கைகொடுக்கும்.

சீறிப் பாயும் கார்களை மட்டுமே தேர்வு செய்யாமல், சமூக பொறுப்புணர்வோடு இத்தகைய கார்களை வாங்குவது அதிகரித்தால்தான், இதுபோன்ற பேட்டரி கார் தயாரிப்பு அதிகரிக்கும்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x