Last Updated : 15 May, 2017 10:47 AM

 

Published : 15 May 2017 10:47 AM
Last Updated : 15 May 2017 10:47 AM

கார் டயரின் காற்றழுத்தத்தை காட்டும் உணர் செயலி!

ஆட்டோமொபைல் துறையில் புதிய வரவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், புதிய கண்டுபிடிப்புகளும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. பாதுகாப்பான பயணம், சொகுசான பயணம் என அனைத்து அம்சங்களையும் மேம்படுத்த புதுப் புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

பயண வழிகாட்டலுக்கு இப்போது வரைபட நேவிகேஷன், பாதுகாப்பான பயணத்துக்கு ஏர் பேக், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம் என பல்வேறு வசதிகள் கார்களில் வந்து கொண்டேயிருக்கின்றன.

இந்த வகையில் தற்போது புணேயில் உள்ள பாரதி வித்யாபீட பல்கலை (பியுவி) பொறியியல் மாணவர்கள் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். உணர் கருவி மூலம் (சென்சார்) இயங்கும் இந்த செயலி, காரின் டயர்களில் உள்ள காற்றழுத்தத்தை சொல்லும். கொளுத்தும் வெயிலில் டயர் வெடிப்பு நிகழ்ந்து கார் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகம். அத்தகைய சம்பவங்களிலிருந்து காப்பாற்ற உதவும் என்கின்றனர் இந்த பொறியியல் மாணவர்கள்.

நெடுஞ்சாலைகளில் டயர் வெடிப்பு சம்பவங்களால் ஏற்படும் விபத்து குறித்து ஒரு கணக்கெடுப்பை நடத்திய இந்த மாணவர்கள், இதற்குத் தீர்வு காணும் முயற்சியாக இந்த செயலியை உருவாக்கியதாகக் கூறுகின்றனர்.

கார் டயர் அதிக வெப்பமானால் அதுகுறித்த தகவலை டிரைவரின் மொபைல் போனுக்கு இந்த உணர் கருவி அனுப்பும். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த அரிய பயனுள்ள செயலியை உருவாக்கிய மாணவர் குழுவுக்கு ஆலோசனை வழங்கிய பேராசிரியர் ஆர்.பி. கோன்கடே கூறியதாவது: நெடுஞ்சாலைகளில் பொதுவாக கோடைக் காலங்களில் அதிக வெப்பம் காரணமாக டயர்கள் வெடிக்கும். இதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் அதிகமாக இருக்கும். சாலைகளில் வேகமாக செல்வது மற்றும் டயரினுள் உள்ள காற்று வெப்பம் காரணமாக விரிவடைவதால் டயர் வெடிப்பு நிகழும் என்றும் குறிப்பிட்டார்.

பொறியியல் இறுதி ஆண்டு மாண வர்கள் குழுவினர் இந்த செயலியை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். வாகனங்களின் டயர்களில் உள்ள காற்றழுத்தம், அது கான்கிரீட் தளத்தில் செல்லும்போது ஏற்படும் வெப்பம், தார் சாலையில் செல்லும்போது உருவாகும் வெப்பம் ஆகியவற்றை கணக்கீடு செய்தனர். அத்துடன் வாகனம் வேகமாக செல்லும்போது ஏற்படும் வெப்பத்தையும் அளவிட்டனர். வாகனத்தின் எடை உள்ளிட்டவற்றைக் கணக்கிட்டு அதனடிப்படையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு டயர் வெடித்து நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் 9,748. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,371. பலத்த காயமடைந்தோரின் எண்ணிக்கை 9,081 ஆகும். மிகவும் அதிர்ச்சியளிக்கும் டயர் வெடிப்பு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 6 மாதங்களாக மாணவர்கள் இதற்குரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு டயர் வெப்ப கண்காணிப்பு முறையை உருவாக்கியுள்ளனர்.

இது மிகவும் எளிமையான முறை யாகும். வாகனங்களில் ஏற்கெனவே உள்ள வயரிங் முறையில் சிறிதளவு மாற்றம் செய்வதன் மூலம் இதை இயங்கச் செய்யலாம். இந்த கருவிக்கான மின்சாரம் பேட்டரி மூலம் பெறப்படும். இந்த உணர் கருவி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 380 டிகிரி செல்சியஸ் வரையான வெப்பத்தை துல்லியமாக அளவிடக் கூடியது.

ஒவ்வொரு டயர் பகுதிக்கு மேலே தனித்தனியான உணர் கருவிகள் பொறுத்தப்படும். இது தொடர்ந்து டயரின் வெப்பத்தை அளவிட்டு தெரிவிக்கும். இது வயர் இல்லா இணைப்பு மூலம் செயல்படக் கூடியது. தகவல்களை செல்போனுக்கு தொடர்ந்து அனுப்பும். இதன் மூலம் அனைத்து டயர்களின் வெப்பத்தை உணர்ந்து அதற்கேற்ப நடவடிக்கை களை எடுக்க முடியும். காரின் வேகத்தைக் குறைப்பது, சிறிது நேரம் காரை நிழலில் நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க உதவும்.

இதுபோன்ற செயலி வெளிநாடு களில் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. குறிப்பாக வெப்பம் அதிகமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் நிச்சயம் நெடுஞ்சாலைகளில் டயர் வெடித்து நிகழும் விபத்துகளின் எண்ணிக்கை குறையும். இதனால் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும்.

பொறியியல் கல்லூரி மாணவர் கள் உருவாக்கிய இந்த உணர் செயலியை அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கார்களில், வாகனங்களில் வைக்கத் தொடங்கினால் சாலை விபத்துகளைக் குறைக்கலாம். அதே சமயம் செல் போனுடன் இணைப்பதன் மூலம் கார் ஓட்டுபவருக்கு அது தொந்தரவாகவே இருக்கும். கார் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது மேலும் ஆபத்தில் முடியலாம். அதனால் டயர் அழுத்தத்தை டாஷ் போர்டில் தெரியும் படி வைப்பதன் மூலம், ஓட்டுநர் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

உயிர்காக்கும் ஏர் பேக்குகளைப் போல, டயர் அழுத்த கருவியையும் கட்டாயம் நிறுவ வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கலாம். அந்த சூழல் விரைவில் ஏற்படும் என நம்புவோம்.

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x