Published : 13 Feb 2017 10:23 AM
Last Updated : 13 Feb 2017 10:23 AM

உன்னால் முடியும்: ‘நான் தினசரி கடந்து செல்கிறேன்’

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அம்பத்தூரில் ஒரு நிறுவனத்தில், மாதம் 300 ரூபாய்க்கு வேலை செய்தவர் கரூரைச் சேர்ந்த மணிகண்டன். இன்று அந்த நிறுவனத்துக்கு அருகிலேயே 45 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சொந்த தொழில் குறித்த எண்ணமிருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு ஒரு எதிர்பாராத தருணம் வேண்டும் என்று குறிப்பிடும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

பொறியியல் பட்டப் படிப்பு கடைசி செமஸ்டரில், வேலை தேடத் தொடங்கி னேன். ஒரு விளம்பரத்தில் ரூ.2,000 பணம் கட்டினால் உடனடி வேலை வாய்ப்பு என்பதை நம்பி பணத்தை கட்டியிருந்தேன் கல்லூரி முடிந்த அடுத்த நாள் அவர்கள் குறிப்பிட்ட சென்னை, அம்பத்தூர் முகவரிக்கு வந்தேன். ஆனால் அந்த முகவரி போலி என்பதும் மோசடி விளம்பரம் என்பதும் தெரிந்தது.

அருகிலிருந்த டீ கடையில் இந்த விவரத்தை சொன்னதும் அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் குறிப்பிட்டனர். கையில் பணமும் இல்லை, இங்கு தங்கி வேலை தேடுகிறேன் என்று வீட்டிலும் செலவுக்கு பணம் கேட்க முடியாது என்பதால் அந்த நிறுவனத்தில் மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் உதவியாளர் வேலைக்குச் சேர்ந்தேன்.

சில லட்சங்கள் செலவு செய்து பொறியியல் படித்தது இப்படி ஹெல்ப்பர் வேலைக்குத்தானா என அப்போது ஆற்றாமையாக இருக்கும். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த பிறகு, அருகில் வேறொரு நிறுவனத்துக்கு குவாலிட்டி செக்கிங் வேலைக்கு 5,000 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தேன்.

சில ஆண்டுகளில் அடுத்தடுத்து வேலை கள் மாறி டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனம், திருச்சி சிதார் வெசல்ஸ் என பத்தாண்டுகளில் இன்ஜினீயரிங் துறை யிலேயே மார்க்கெட்டிங் அனுபவத்தோடு மாதம் 4.5 லட்சம் சம்பளத்தில் இருந்தேன்.

வீட்டில் வாஷிங்மெஷினை அடிக்கடி நகர்த்த வேண்டி இருந்ததால் அதற்காக ஸ்டேன்ட் வாங்க ஒரு நாள் கடைக்குச் சென்றிருந்தேன். அதன் விலை ஒரு கடையில் ரூ.2,500 என்றும் இன்னொரு இடத்தில் ரூ.1,800 என்று சொன்னார்கள். மொத்தமே 1 கிலோ மெட்டீரியல்தான். இதர செலவுகள் எல்லாம் சேர்த்தாலும் 500க்குள்தான் அதன் விலை இருக்கும். இதற்கு இவ்வளவு விலையா கொடுப்பது? இதை நாமே செய்து கொண்டால் என்ன என தோன்றியது.

எனது உறவினர் ஒருவரது லேத் பட்டரையில் இதற்கான டிசைனைக் கொடுத்து செய்து வாங்கினேன். நான் குடியிருந்த பிளாட்டில் உள்ளவர்களுக்கு அது தெரிந்து எல்லோரும் அதைக் கேட்கத் தொடங்கினர். எனக்கு சொந்த தொழில் யோசனை இருந்த வேளையில் இப்படி ஒரு வாய்ப்பு உருவானது. அதனால் பகுதி நேரமாக இந்த வேலைகளைத் தொடங்கினேன்.

வாஷிங்மெஷின் ஸ்டேண்ட் தவிர எல்பிஜி சிலிண்டர் ஸ்டேண்டையும் தயா ரித்து விற்பனையகங்களுக்கு மொத்த மாகக் கொடுக்கத் தொடங்கினேன். ஆனால் விற்பனையாளர்கள் பணத்தை தர தாமதப்படுத்தியதால் மறு முதலீடு, ஆட் களுக்கான கூலி, கரண்ட் பில் கட்டுவதில் கூட நெருக்கடி ஏற்பட்டது. தொழிலுக்கான அனுமதிகள் வாங்கியிருந்தாலும் முறையான ஆவணங்கள் பராமரிக்க தெரியவில்லை. ஒருமுறை தொழிலாளர் துறை அதிகாரிகள் அந்த இடத்துக்கு சீல் வைத்து சென்று விட்டனர். நல்ல சம்பளத்தில் வேலையில் இருக்கும் உனக்கு இது தேவையில்லாத வேலை என குடும்பத்திலும் சிக்கல் உருவானது. இப்படி ஆரம்பத்தில் பல நெருக்கடிகள் உருவாயின.

இந்த நேரத்தில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தினர் டிராலி போன்ற இயந் திரத்தை கேட்டனர். அப்போதிலிருந்து தொழில்துறையினர் பயன்படுத்தும் டிராலியை உருவாக்கத் தொடங்கினேன். அதன்பிறகு நிறுவனங்களுக்கான தேவை களை முன்வைத்து வடிவமைப்பை உருவாக்கிக் கொண்டு அந்த நிறுவனங் களுக்குச் செல்லத் தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதன் பிறகு 2013-ம் ஆண்டில் முழுநேரமாக சொந்த தொழிலில் இறங்கிவிட்டேன்.

கார் நிறுவனங்களுக்கு சீட், டாப் உள்ளிட்ட பாகங்களை அனுப்பும் துணை நிறுவனங்களுக்கு எங்களது தயாரிப்புகள் அவசியமாக இருக்கின்றன.

வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து வடிவமைத்துக் கொண்டால், வேலைகளை செய்து வாங்க நிறைய லேத்கள் உள்ளன என்பதால் சொந்த இயந்திரங்களை குறைத்துக் கொண்டேன். நிறுவன தொடக்கத்தி லேயே தனித் தனியாக நிர்வாக அமைப்பை உருவாக்கிக் கொண்டேன். அப்போதிலிருந்து வாரம் தவறாமல் மீட்டிங் போடுகிறேன். 2025 ஆண்டு வரை இலக்கு வைத்துக் கொண்டு பயணிக்கிறோம். கடின உழைப்பைவிட ஸ்மார்ட் வேலைகள்தான் ஒவ்வொரு கட்டமாக என்னை வளர்த்தது. நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த நிறுவனத்தில் இப்போதும் அதே வேலைகள்தான் செய்து கொண்டிருக்கின்றனர். ‘நான் தினசரி கடந்து சென்று கொண்டிருக்கிறேன்.’

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x