Published : 15 Aug 2016 02:53 PM
Last Updated : 15 Aug 2016 02:53 PM

உன்னால் முடியும் : நம்பிக்கை கொடுத்த புதிய முயற்சிகள்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஃபர், தற்போது சென்னை பாரிமுனையில் கொசுவலை சார்ந்த தொழில் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் முக்கிய அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களை வாடிக்கையாளராகக் கொண்டிருக்கும் இவரது அனுபவம் இந்த வாரம்’ வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

கம்ப்யூட்டர் டெக்னாலஜியில் டிப்ளமா படித்துவிட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தேன். நுங்கம்பாக்கத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. மாதம் 2,000 ரூபாய்தான் சம்பளம் அதிலும் முதலிரண்டு மாதங்கள் சம்பளமில்லை. அந்த நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருக்கும்போது இப்படியே இருந்தால் நல்ல சம்பளம் கிடைக்காது. தவிர எனது கல்வித் தகுதிக்கு வேறு நல்ல வேலையும் கிடைக்காது என்பதை உணர்ந்தேன். வீட்டிலிருந்து பணம் வாங்கி படிக்க முடியாத சூழ்நிலையில் அந்த கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்திலிருந்து விலகி, வேறு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலைக்கு மாறிவிட்டேன்.

கடைசியாக சின்டெக்ஸ் நிறுவனத்தின் பிவிசி கதவுகளுக்கான மார்க்கெட்டிங் வேலைக்குச் சேர்ந்தேன். எனக்கு அது நல்ல வாய்ப்பாக தெரிந்ததால் அந்த வேலையில் நான் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினேன். நிறுவனத்திலும், டீலர்கள், விற்பனையாளர்களிடத்திலும் நல்ல பெயர் உருவாக்கிக் கொண்டேன். ஆனாலும் அங்கு ஏற்பட்ட ஒரு குழப்பம் காரணமாக நானும் எனது நண்பர்கள் சிலரும் வேலையிலிருந்து விலகினோம்.

இந்த சமயத்தில் என்மேல் நல்ல அபிப்ராயம் வைத்திருந்த டீலர் ஒருவர் கொசுவலை பிசினஸ் குறித்த யோசனையைச் சொன்னார். இங்கு ஏற்கெனவே உள்ள நைலான் கொசுவலை இல்லாமல், கதவுகள், ஜன்னல்களுக்கு வெல்க்ரோ வைத்து தைக்கப்படும், பிவிசி, பைபர் கொசுவலைகளின் தேவைகள் குறித்து விளக்கினார்.

எனக்கு அப்போது உடனடியாக வேலை வேண்டும் என்பதால் அந்த தொழிலில் இறங்கினேன். ஆனாலும் இதில் வர்த்தக வேலைகளை மட்டுமே பார்த்தேன். இந்த வலைகள் சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி கிடையாது. ஒன்றரை ஆண்டுகள் இதை வாங்கி விற்கும் மார்க்கெட்டிங் வேலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த வலைகளை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வெட்டி, வெல்க்ரோ தைத்து விற்பனைக்கு அனுப்புவார்கள். ஒரு கட்டத்தில் நாமே இந்த வேலைகளையும் செய்தால் என்ன என்கிற யோசனை வந்தது. உதவிக்கு ஒருவரை மட்டும் வேலைக்கு வைத்துக் கொண்டு நானே இந்த வேலைகளிலும் இறங்கினேன். வெல்க்ரோ தவிர இதர பிரேம்களிலும் கொசுவலைகள் வைத்து கொடுக்க முடியும் என எனது முயற்சிகளிலேயே கற்றுக் கொண்டேன். தவிர ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினாலான கொசுவலைகளையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தேன். இதற்கான மார்க்கெட்டிங் உத்திகளும் எனக்கு தெரியும் என்பதால் விரைவிலேயே தொழிலில் பரபரப்பாகிவிட்டேன். இப்போது வீடுகளுக்காக ஆர்டர்கள் தவிர கல்லூரி விடுதிகளுக்கான ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது.

இந்த தொழிலுல் பல ஆண்டுகள் அனு பவம் கொண்டவர்களுக்கு மத்தியில் நானும் பரபரப்பானற்கு முக்கிய காரணம் புதிய முயற்சிகள்தான். கொசுவலைகளில் வெல்க்ரோ தவிர காந்த ஸ்ரிப்புகள், எலாஸ்டிக், என பல வகைகளில் கொடுக் கிறேன். தரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சதுர அடி ரூ.20 முதல் 300 ரூபாய் வரையிலுமான கொசுவலைகள் உள்ளன. இப்போது பத்து நபர்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். என்னிடம் வேலை பார்த்த சிலர் தங்களது சொந்த ஊருக்கே சென்ற பிறகு, அங்கு இதை வேலை வாய்ப்பாக எடுத்து செய்து வருகின்றனர், அவர்களுக்கும் மெட்டீரியல் அனுப்பி வைக்கிறேன்.

இந்த தொழிலில் நமது உள்ளூர் போட்டியாளர்களைகூட சமாளித்துவிட முடியும். ஆனால் பைபர் வலையை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனமே இங்கு நேரடியாக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கிறது. அவர்களை சமாளிப் பதுதான் சிரமம். இன்னொருபக்கம் வங் கிக் கடன் கிடைத்தால் தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய முடியும். ஆனால் வட்டியில்லாத முறையில் வங்கிக்கடன் வாங்க முடியாது என்பதால் அடுத்த கட்டங் களுக்கு மெதுவாகத்தான் செல்கிறேன்.

இரண்டு நபராக ஆரம்பித்த தொழிலில் இப்போது பத்து பேருக்கு வேலை இருக்கிறது. அதை இன்னும் அதிகரிப்பேன் அந்த நம்பிக்கை இருக்கிறது என்றார். புதிய முயற்சிகள் எப்போதும் தோல்வியடைவதில்லை ஜாஃபர் வாழ்த்துக்கள்.

இந்த தொழிலில் நமது உள்ளூர் போட்டியாளர்களைகூட சமாளித்துவிட முடியும். ஆனால் பைபர் வலையை உற்பத்தி செய்யும் அமெரிக்க நிறுவனமே இங்கு நேரடியாக வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிக்கிறது. அவர்களை சமாளிப் பதுதான் சிரமம்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x