Published : 12 Sep 2016 10:51 AM
Last Updated : 12 Sep 2016 10:51 AM

உன்னால் முடியும்: சொந்தத் தொழிலிலும் இலக்கு வேண்டும்...

சென்னை முடிச்சூரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். படித்தது பத்தாம் வகுப்பு. குடும்ப சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்பதால் பல்வேறு சிறு சிறு வேலை களுக்கும் சென்று கொண்டிருந்தவர்... இன்று ஆறு நபர்களுக்கு வேலையளிக்கும் தொழில்முனைவோராக வளர்ந்து நிற்கிறார். அக்ரலிக் பெட்டிகள், டிஸ்பிளே ஸ்டாண்டுகள், நேம் பேட்ஜ் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழில் புரியும் இவரது அனுபவம் இந்த வாரம் `வணிக வீதி’-யில் இடம் பெறுகிறது.

குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. ஆனால் நாங்கள் ஆங்கிலோ இந்தியன் குடும்பம் என்பதால் ஆங்கிலம் சரளமாகப் பேசுவேன். அப்பாவுக்கு பெரிதாக வருமானமில்லாத காரணத்தினால் நான் அதற்கு பிறகு சின்ன சின்ன வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினேன். அப்படி பல வேலை களுக்குப் பிறகு கடைசியாக மார்க்கெட்டிங் வேலை செய்து கொண்டிருந்தேன்.

நானும் எனது நான்கு நண்பர்களும் சேர்ந்து பாரீஸ் சந்தையில் எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்து ஏரியாக்களில் நேரடியாக விற்பனை செய்தோம். ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருந்தன. யார் என்ன என்பது தெரியாமல் பல நெருக்கடிகள் அந்த தொழிலில் உருவானது. இதனால் வாழ்க்கை மீதான பயம் ஏற்பட்டது. இப்படியே இருந்தால் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியாது என்கிற பயம் இருந்தது.

அந்த யோசனை எழுந்த நாட்களில் ஒருநாள் மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த ஏரியாவில் அக்ரலிக் பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்த ஒருவரது அறிமுகம் கிடைத்தது. அவரும் வேலைக்கு அழைத்தார். அந்த நிறுவனத்தில் மாத சம்பளத்துக்கு மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தேன்.

அக்ரலிக் டிஸ்பிளே ஸ்டேண்டுகள் உள்ளிட்ட பல பொருட்களை அவர்கள் இறக்குமதி செய்து இங்கு விற்பனை செய்தனர். ஆனால் அவற்றின் விலை அதிகம். நான் மார்க்கெட்டிங் வேலைகளுக்காக அலைந்த வகையில் அந்த பொருட்களை இங்கேயே குறைவான விலைக்குத் தயாரிக்க முடியும் என்பதை அறிந்து கொண்டேன். அந்த சந்தர்ப்பத்தில் சில வாடிக்கையாளர்கள் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இல்லாத மாடல்களையும் என்னிடம் கேட்டனர். இதனால் அதை தனியாக வெளியில் செய்து கொடுத்தேன். ஆனால் நமது பொருட்களை மட்டும்தான் விற்க வேண்டும் தனியாக செய்து தரக்கூடாது என்று நிறுவனம் கூறியதால் வேலையிலிருந்து விலகி அந்த தொழிலிலேயே தனியாக மார்க்கெட்டிங்கில் இறங்கினேன்.

டிசைன்கள் உருவாக்குவது, மார்க்கெட்டிங் இரண்டிலும் முழு கவனம் செலுத்தினால் போதும், மற்றெதுவும் நாம் நேரடியாக செய்ய வேண்டும் என்பதில்லை. வடிவமைப்பதற்கு ஆட்கள் தனியாக இருக்கின்றனர். அக்ரெலிக் ஷீட்டுகளை மொத்தமாக வாங்கி டிசைன்களுக்கு ஏற்ப வடிவமைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்தால் போதும். இதுதான் என் வேலை. பெரிய நிறுவனங்களில் டிஸ்பிளே ஸ்டேண்டுகளின் டிசைன்களை அடிக்கடி மாற்றுவார்கள் அவர்கள்தான் என் இலக்கு. இதற்காக மால்களில் உள்ள நிறுவனங்களுக்கு அடிக்கடி சென்று எனது டிசைன்களைக் காண்பித்து ஆர்டர் வாங்குவேன். இயல்பாகவே ஆங்கிலம் பேச முடியும் என்பதால் கார்ப்பரேட் நிறுவன ஆர்டர்களை பெறுவதில் இதுவரை சிக்கல் இருந்ததில்லை.

இந்த தொழிலில் தயாரிப்பு நஷ்டம் இருக்காது என்றாலும் மூலப்பொருளை பணம் கொடுத்து வாங்கி அதை தயாரித்து கடனுக்கு அளிக்க வேண்டியிருக்கும். இதனால் ஒரு இடத்தில் சறுக்கினாலும் சிக்கலாகிவிடும். இது மட்டும்தான் நெருக்கடியாக இருக்கும். பொருளாதார சூழல் காரணமாக படிக்க முடியாத நிலைமை அவ்வப்போது உறுத்தியதால், இப்போது தொலைதூரக் கல்வி திட்டத்தில் சேர்ந்து படித்தும் வருகிறேன்.

டிஸ்பிளே போர்டுகள் தவிர டோர் எண் ஷீட்டுகள், நேம் பேட்ஜுகள், டிராப் பாக்ஸ்கள் என பலவற்றையும் செய்து கொடுத்து வருகிறேன். தேவைக்கு ஏற்ப 6 பேருக்கு வேலை கொடுக்கிறேன். அடுத்த கட்டமாக சொந்த இடத்தில் இருந்து செய்ய வேண்டும் என்பதுதான் என் இலக்கு என்றார். தனது உழைப்புக்கு பின்னால் பல நண்பர்கள் பக்க பலமாக இருந்துள்ளனர் அவர்களுக்கு எப்போதும் நன்றிக் கடன் பட்டிருப்பதை கட்டாயம் குறிப்பிட வேண் டும் என்ற வேண்டுகோளுடன் முடித்தார் ஜேம்ஸ்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x