Published : 24 Oct 2016 11:27 AM
Last Updated : 24 Oct 2016 11:27 AM

உன்னால் முடியும்: ஒரு திரைப்பாடல் கொடுத்த தன்னம்பிக்கை

கோயம்புத்தூரை சேர்ந்தவர் செல்லதுரை. வணிக நிறுவனங்களுக்கான நிழற்கூரைகள், முன்கூரைகள், டென்ட், வர்த்தக நிழல் குடை அமைக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். பூர்வீகம் திருச்சி என்றாலும், பிறந்தது படித்தது எல்லாம் கேரள மாநிலத்தில். இவரது வெற்றிக் கதைக்கு பின்னால் வேலைதேடி மதுரை வந்து ஏமாந்த அனுபவம் இருக்கிறது. ‘‘ஒருவேளை வேலை கிடைத்திருந்தால் தொழில்முனைவோராக உருவாகியிருப்பேனா தெரியாது’’ என்று குறிப்பிடும் செல்லதுரை தனது தொழில் அனுபவத்தை `வணிகவீதி’க்காக பகிர்ந்து கொண்டதிலிருந்து..

டீ எஸ்டேட் வேலைக்காக அப்பா குடும்பத்தோடு கேரளா வந்தவர். அதனால் நான் பிறந்தது, படித்தது எல்லாமே கேரளாதான். ஆனால் உறவினர்கள், சொந்த இடம் என திருச்சியோடு தொடர்பில் இருந்ததால் அவ்வப்போது வந்துசெல்வோம். நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைதேடியபோது மதுரையில் உள்ள ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவன விளம்பரத்தை பார்த்து விட்டு, கையில் 2,500 ரூபாயோடு கேரளாவிலிருந்து கிளம்பி வந்தேன். அந்த அலுவலகத்துக்கு காலையில் சென்றிருந்தேன். இப்போதே 2,000 ரூபாய் பணத்தை கட்டிடுங்க, மதியமே நீங்க வேலைக்கு சேர்ந்திடலாம் என்று கூறினர்.

அது ஆசை காட்டும் வார்த்தை என எனக்கு அப்போது தெரியவில்லை. நானோ உடனே வேலை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் கையிலிருந்த பணத்தைக் கட்டிவிட்டேன். ஆனால் அன்று மாலை வரை அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. அங்கு வந்த சென்றவர்களிடம் விசாரித்ததில் இந்த நிறுவனத்தில் இப்படிதான் சொல்வார்கள், ஆனால் உடனே எல்லாம் கிடைக்காது என்று பீதியூட்டினர். பணத்தை திருப்பி கேட்டால், இன்னும் ஒரு சில நாட்களில் வேலை ரெடி ஆகிடும், தங்கி இருந்து சேர்ந்துடுங்க என்றனர்.

நான் ஏமாந்து விட்டேன் என்று தெரிந்த, ஊர்திரும்பிச் செல்ல கையில் இருக்கும் பணமும் போதாது. இதனால் திருப்பூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஊருக்குச் செல்லலாம் என மதுரையிலிருந்து திருப்பூர் வந்தேன். திருப்பூர் பேருந்து நிலையத்தில் அன்றிரவு படுத்து உறங்கினேன். காலையில் போலீஸ்காரர் வந்து எழுப்பி விட்டார். விடிகாலை நேரம் என்பதால் அங்குள்ள டீ கடை ஒன்றில் ஒளிமயமான எதிர்காலம் உன் கண்களில் தெரிகிறது என்கிற பாடல் ஒலிக்க தொடங்கியது.

அந்த பாடல் கேட்ட நேரத்தில் அங்கு பல வேலைவாய்ப்பு போஸ்டர்கள் கண்ணில்பட்டன. இங்கு இல்லாத வேலையா ? எதற்கு ஊருக்குச் செல்ல வேண்டும்? என வைராக்கியம் வந்தது. ஒரு பனியன் நிறுவனத்தில் மாதம் 800 ரூபாய்க்கு வேலை கிடைத்தது. 3 மாதங்கள் அங்கு வேலைபார்த்தேன். ஆனால் திருப்பூரின் சீதோஷ்ண நிலை எனக்கு சரிவரவில்லை. இதற்கிடையில் எனது கேரள நண்பன் ஒருவன் கோயம் புத்தூரில் வேலைசெய்துவந்தான். அவ னோடு தங்கிக் கொண்டு வேறு வேலை தேடலாம் என கோவை புறப்பட்டேன்.

அங்கு வேலைதேடிக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுகிழமை அங்குள்ள சர்ச்-க்கு சென்றிருந்தேன். அங்கு வழிபாடு முடிந்ததும் ஒரு வேலை வாய்ப்பு குறித்து அறிவித்தனர். நான் பாதரை பார்த்து வேலை தேடிக் கொண்டிருக்கும் விவரத்தை சொல்லி அவரது சிபாரிசு மூலம் அந்த வேலையில் சேர்த்தேன். அப்படி நான் வேலைக்கு சேர்ந்த நிறுவனம் இந்த தொழிலில்தான் ஈடுபட்டிருந்தது. அங்கு மாதம் 1,500 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்து, அதன் பிறகு அந்த நிறுவனத்தின் சார்பில் கேரள மாநில மார்க்கெட்டிங்வரை பார்த்துக் கொண்டேன்.

9 ஆண்டுகள் அங்கு வேலைபார்த்தேன். ஒருகட்டத்தில் அங்கிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது. வேறு வேலை தேடலாம் என யோசித்த போது, அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் நீ தனியாகவே இந்த தொழிலில் இறங்கு என வழிகாட்டினார். அப்போது கையிலிருந்த 30 ஆயிரத்தை வைத்துதான் இந்த தொழிலைத் தொடங்கினேன். இப்போது 15 நபர்களுக்கு வேலை கொடுத்து வருகிறேன். திருச்சியில் எங்களது சொந்த இடத்திற்கே அப்பா அம்மாவைக் கொண்டு வந்துவிட்டேன்.

இப்போதும் பேருந்து நிலைய வேலை தொடர்பான விளம்பர வாசகங்களும், ஒளிமயமான எதிர்காலம் என்கிற திரைப்பட பாடலும் என்னை ஒரு கணம் எங்கேனும் நிறுத்திவிடத்தான் செய்கிறது என்று தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

vanigaveedhi@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x