Published : 19 Dec 2016 11:05 AM
Last Updated : 19 Dec 2016 11:05 AM

உன்னால் முடியும்: உழைப்பு மட்டுமே நம்மை வளர்க்கும்

ஜவுளித் துறை நகரமான கரூரில் பல பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் தனது அனுபவத்தை நம்பி சிறிய அளவில் தொழில் தொடங்கியவர் அஜய் பிரசாத். இன்று பல நாடுகளுக்கும் தனது தயாரிப்புகளான ஏப்ரன், டேபிள் கிளாத் போன்றவற்றை அனுப்பி வரும் இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.

கரூர்தான் சொந்த ஊர். படித்து முடித் ததும் வேறு ஊருக்கு வேலை தேடி போக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இங்கேயே பல வேலை வாய்ப்புகள் இருந் தன. எனது உறவினர்கள் ஏற்கெனவே கொசுவலை தயாரிப்புகளில் இருந்தனர். ஆனால் அந்த தொழில் நலிவடைந்ததால் அதிலிருந்து வெளியேறிவிட்டனர். இதற் கிடையில் படித்து முடித்துவிட்டு ஒரு நிறு வனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். கரூரில் ஜவுளி தொழிலில் பிரதானமாக உள்ளது ஏற்றுமதிக்கான தயாரிப்புகள்தான். ஏப்ரன், கிளவுஸ், டேபிள் கிளாத் போன்றவை ஏற்றுமதிக்காக தயாரிக்கப்படுகின்றன. அங்கு இரண்டு ஆண்டுகள் அனுபவத்துக்கு பிறகு சொந்தமாக இறங்க முடிவு செய்தேன். இது முழுக்க முழுக்க ஏற்றுமதிக்கான தொழில். ஏற்கெனவே மிகப் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவர்களோடு போட்டி போடுவது என்பது சாதாரணமானதல்ல, ஆனால் வெளிநாட்டு ஆர்டர்களை பிடிப்பதற்கு இங்கு யாருடைய உதவியும் தேவையில்லை. நேரத்திற்கு சப்ளை செய்வதும், தரமாகவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஜெயிக்க முடியும் என்பதுதான் கரூரில் உள்ள நிலைமை. நான் அந்த ரிஸ்க் எடுத்த போது எனக்கு வயது 24தான்.

முக்கியமாக வெளிநாடுகளில் நடை பெறும் கண்காட்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு வரும் வாடிக்கையாளர் தொடர்புகள், நவீன இயந்திரங்கள் குறித்த அனுபவமும் கிடைக்கும். ஆனால் தொழில் தொடங்கிய நான்கு ஆண்டுகள் வரை எனக்கு வெளிநாட்டு கண்காட்சிகளுக்கு போகும் அளவுக்கு வசதிகள் கிடையாது. ஆன்லைன் ஆர்டர்களை நம்பித்தான் இருந்தேன். ஒவ்வொரு ஆண்டாக மெல்ல விற்பனை அதிகரித்தது, ஆண்டுக்கு ஒரு முறை வெளிநாட்டு கன்காட்சிக்கு செல்ல தொடங்கி, இப்போது ஆண்டுக்கு நான்கு கண்காட்சிகள் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

இந்த தொழிலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது குறித்த நேரத்தில் பொருட்களை அனுப்ப வேண்டும். நேரத்தை தவறவிட்டால் கப்பலில் அனுப்ப வேண்டிய பொருட்களை விமானம் மூலம் அனுப்ப வேண்டிய நெருக்கடி உருவாகும். இதனால் நமக்கு கூடுதல் செலவாகும். அல்லது ஆர்டரே கேன்சல் ஆகலாம். இப்போது எனக்கு பதினோரு ஆண்டு அனுபவம் உள்ளது. ஆனாலும் இப்போதும் ஒன்றிரண்டு ஆர்டர்கள் இதுபோல ஆகிவிடும்.

நமக்கு துணை வேலைகளை பார்த்து கொடுக்கும் நிறுவனங்கள் காலதாமதப் படுத்தினால் இந்த சிக்கல்கள் உருவாக லாம். ஆனால் அவர்கள் இந்த சிக்கல்கலை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். வெளியில் கொடுத்து வாங்கும் பொருட்களை அப்படியே அனுப்பி விடவும் முடியாது. ஒரு கண்டெய்னரில் சோதனைக்கு எடுக்கும் ஒன்றிரண்டு பொருட்களில் சின்ன நூல் பிரிந்திருந்தாலும் மொத்தமும் திரும்பி விடுவார்கள். செக்கிங், பேக்கிங் வேலைகள் நமது கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதுபோல பிராண்டிங் வேலைகளையும் நாமே மேற்கொள்ள வேண்டும்.

இந்தத் தொழிலுக்கு முக்கியமான இன்னொரு அத்தியாவசிய தேவை. மொழி. ஆங்கிலம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். என்னதான் நமது தயாரிப்புகள் தரமாக இருந்தாலும், அதை சரியாக விளக்கத் தெரிந்திருக்க வேண்டும். வெளிநாட்டு கண்காட்சிகளில் கலந்து கொள்ள இதுதான் முக்கியதேவையாக உள்ளது. நான் ஆங்கில வழியில் படித்திருந்தாலும், ஆரம்பத்தில் தடுமாற்றம் இருந்தது. தொழிலில் முழு வீச்சாக இறங்கியபோது இதற்கும் கவனம் செலுத்தி கற்றுக் கொண்டேன்.

தவிர அப்டேட் மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நமது தயாரிப்பு பொருட்களுக்கு ஏற்ப மட்டும் மாடல்களை யோசிக்ககூடாது. நாம் எந்த நாட்டு வாடிக்கையாளர்களை வைத்துள்ளோமோ அங்கு நிலவும் டிரண்டுக்கு ஏற்ப மாடல்கள் அமைய வேண்டும். இப்போது அதிகளவில் ஜப்பா னுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன்.

இப்போது நேரடியாகவும் மறைமுக மாகவும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை அளித்து வருகிறேன். இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. இளம் வயதில் துணிச்சலாக இறங்கியதுதான் இப்போது என்னை வளர்த்துள்ளது. இந்த தொழிலில் இப்போதும் புதியவர்களுக் கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. ஏற்றுமதியாளருக்காக அரசும், வங்கி களும் உதவி செய்கின்றன. ஆனால் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இறங்கக் கூடாது. நமது உழைப்பு மட்டும் நம்மை வளர்க்கும் என்கிறார் அஜய்.

தொடர்புக்கு: vanigaveedhi@thehindutamil.co.in







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x