Published : 08 Aug 2016 11:08 AM
Last Updated : 08 Aug 2016 11:08 AM

உன்னால் முடியும்: அனுபவம் அடுத்த கட்டத்துக்கு வழிநடத்தும்

சென்னை பெருங்குடியைச் சேர்ந் தவர் சுப. வயது 22. பிபிஏ படித்து முடித்ததும் சுயமாக நிற்க வேண்டும் என திட்டமிட்டவர். இன்று 6 பேருக்கு வேலை அளிக்கும் தொழில் முனைவோராக உருவாகி நிற்கிறார். பல போட்டிகள் இருக்கும் சேவைத்துறையில் தனது புத்தாக்கமான எண்ணத்தின் மூலம் முன்னேற்றமடைந்து வரும் வளரும் தொழில்முனைவோரான இவரது அனுபவம் இந்த வாரம் ’வணிக வீதி’யில் இடம் பெறுகிறது.

சென்னையில்தான் படித்தேன். வசதி யான குடும்பம். அம்மா ஒரு பொதுத்துறை வங்கியில் கிளை மேலாளராக உள்ளார். அப்பா வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். நான் கல்லூரி படிப்பு முடித்ததும் மேற்படிப்பு படிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தன. வீட்டினரும் வலியுறுத்தினர்.

ஆனால் எனக்கு தொழிலில் இறங்கிவிட வேண்டும் என்கிற உத்வேகம்தான் இருந்தது. இந்த வயதில் நேரடியாக உற்பத்தி துறை சார்ந்த தொழில் களைத் திட்டமிடமுடியாது. இதனால் சேவைத்துறை சார்ந்த பணிகளில் இறங்க யோசித்தேன்.

தற்போது வரை டோர் டெலிவரி என்கிற பிரிவில் மூன்றாவது நபர்கள் ஈடுபடுவதில்லை. அதாவது டோர் டெலிவரி வேண்டும் என்று போன் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள். இடையில் ஒருவர் வாங்கி வந்து கொடுக்கும் வேலையைச் செய்வதில்லை. அந்த இடம் காலியாக இருந்தது.

இதை மேற்கொள்வதற்கு முன் டோர் டெலிவரி வசதியில்லாத, சிறு விற்பனை யாளர்கள், சிறு உற்பத்தியாளர்களது தொடர்பு வேண்டும். அதாவது அவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேர்க்க வேண்டிய பொருளை எங்களி டம் கொடுப்பது அதை நாங்கள் வாடிக் கையாளர் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பது. இதற்காக பல விற்பனையகங்களை ஆய்வு செய்து சிறு உற்பத்தியாளர்களின் பட்டியலை எடுத்தேன்.

அவர்களை நேரடியாகச் சந்தித்து ‘நான் படித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்ய இறங்கியுள்ளேன். வெற்றி பெற வேண்டும் என்கிற வேகம் உள்ளது. எனக்கு இந்த வாய்ப்பை தாருங்கள்’ என்கிறபோது பலரும் ஏற்றுக் கொண்டனர்.

அதுபோல இன்னொரு பக்கம் சென்னை யின் பல வீடுகளில் தங்களின் அவசியமான சில வேலைகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியாத சூழலில் இருப்பார்கள். வீட்டில் உள்ள வயதானவர்களை அல்லது செல்லப் பிராணிகளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் நேரம் இருக்காது. இதற்காக நாட்களை தள்ளிப்போடுவார்கள். அல்லது அவசரத்துக்கு நண்பர்கள் உறவினர்களை உதவிக்கு கூப்பிடுவார்கள். இதிலும் தொழில்வாய்ப்பு உள்ளதை அறிந்தேன். அதுபோல பிற வேலைகளுக்கும் மாத ஒப்பந்தம் செய்து கொள்வது. இதை முதலில் எனது நண்பர்கள், உறவினர்கள் இல்லங்களில் செயல்படுத்தினோம்.

வெற்றிகரமாக அமைந்தது. இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்களின் அவசரப்பணிகளின் சுமை குறைந்தது. தவிர இதற்கென்று தனியாக வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இதற்கான முதற்கட்ட பயிற்சிகளில் இறங்கினேன். என் நண்பர் ஒருவரும் உடன் உதவி செய்தார். தொழில் தொடங்கிய முதல் மூன்று மாதங்கள் கடும்போராட்டம்தான். எங்களுக்கு வாய்ப்புகளைக் கொடுங்கள் என தொழில் முனைவோர்களை அணுகுவோம். ஆனால் என்னுடைய வயதை வைத்து உன்னால் முடியுமா என்பதைப் போல பார்ப்பார்கள். என்னுடைய உறுதியான பேச்சு மற்றும் வேகத்தை பொறுத்து இப்போது பலரும் தொடர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

தற்போது சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த சேவையை செய்து வருகிறேன். ஒருபக்கம் நிறுவனங்களுக் கான டோர் டெலிவரி சேவை, இன்னொரு பக்கம் வீடுகளுக்கான சேவைகள் என செய்து வருகிறோம். தற்போது கிட்டத்தட்ட நிரந்தரமாக 50க்கும் மேற்பட்ட வீடு சேவை தேவைப்படும் வாடிக்கையாளர்களை கையில் வைத்துள்ளேன். இந்த ஆண்டு இறுதிக்குள் இதை 200 வாடிக்கையாளர் களாக உயர்த்த வேண்டும் இலக்கு வைத் துள்ளேன். தற்போது 6 பேர் பணி புரிந்து வருகின்றனர்.

உயர்கல்வி முடித்தால் நல்ல சம்பளத் தில் வேலை கிடைக்கும் என்கிற யோசனை களை பலரும் சொல்லத்தான் செய்தனர். ஆனால் எனது சொந்த உழைப்பில் ஒரு நிறு வனத்தை உருவாக்குகிறேன் என்பதும், அதிலிருந்து எனக்கான வருமானம் வருகிறது என்பதும் தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது. நானும் இதிலிருந்தபடியே உயர்கல்வியை கற்றலாம். தவிர எதிர்காலத் தில் உயர்கல்வி முடித்தவர்களை என் நிறுவனத்திற்கே பணிக்கும் அமர்த்தலாம். எனது அனுபவம் என்னை அடுத்த கட்டத் துக்கு வழிநடத்தும் என்றார். உங்கள் எண்ணப்படியே நடக்கட்டும் சுப.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x