Last Updated : 20 Apr, 2016 03:39 PM

 

Published : 20 Apr 2016 03:39 PM
Last Updated : 20 Apr 2016 03:39 PM

இந்தியப் பொருளாதாரம் ஜொலிக்கும் நட்சத்திரமா?- மத்திய அமைச்சர்களுக்கு ரகுராம் ராஜன் அழுத்தமான பதில்

'உலகப் பொருளாதாரங்களிலேயே இந்தியாதான் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறிக்கொள்ள இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது' என்று ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.

உலகிலேயே இந்தியப் பொருளாதாரம்தான் அதிவேக வளர்ச்சி நிலையை நோக்கி முன்னேறுகிறது என்று பலரும் கூறுவது குறித்து நான் களிப்படைய மாட்டேன் என்று மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் இவ்வாறு கூறும்போது, அக்கூற்றை எச்சரிக்கையுடன் நெறிப்படுத்துவது அவசியம் என்றார்.

“பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் உடையவரே மன்னன்” என்று ரகுராம் ராஜன் சில தினங்களுக்கு முன்பாக கூறியதை பாஜக தரப்பினர் ஏற்கவில்லை.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரகுராம் ராஜனின் வார்த்தைத் தெரிவு குறித்து தனது அதிருப்தியை வெளியிட, அருண் ஜேட்லியோ “இந்தியப் பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சியடைகிறது” என்று ரகுராம் ராஜன் கூற்றுக்கு பதில் அளிக்குமாறு தெரிவித்தார்.

மேலும் பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் அல்ல இந்தியா, மாறாக ‘ஜொலிக்கும் நட்சத்திரம்’ என்று பாஜக சுயபுகழ்ச்சியில் ஈடுபட, ரகுராம் ராஜன் தற்போது 'இவ்வாறெல்லாம் கூறிக்கொள்ள இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது' என்று எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து புனேயில் நடைபெற்ற தேசிய வங்கி மேலாண்மை கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் விளக்கம் அளித்த ரகுராம் ராஜன் கூறும்போது, “ஒரு மத்திய வங்கி அதிகாரியாக நான் நடைமுறைப் பயன்பாடு கருதி கருத்து தெரிவிப்பது அவசியம். இந்திய பொருளாதாரம் அதிவேகமாக வளர்ச்சிடையும் பெரிய நாடு என்ற அடையாளம் ஏற்றப்படுவது குறித்து நான் மிகுந்த களிப்படைய முடியாது.

பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக்கண் உடையவர் மன்னன் என்று நான் கூறியது அது கூறப்பட்ட சூழலிலிருந்து பிரித்து தனியே எடுக்கப்பட்டுள்ளது. நாம் அதிவேக பொருளாதார வளர்ச்சி நாடு என்ற இடத்துக்கு நாம் வந்து விட்டோம் என்று நாம் கூறிக்கொள்ள இன்னும் நீண்ட தொலைவு சென்றாக வேண்டும். நாம் இதே பொருளாதார வளர்ச்சியை 20 ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டினால் மட்டுமே ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு மரியாதைக்குரிய வாழ்வாதாரம் கிட்டும்.

பிரிக்ஸ் நாடுகளில் இந்தியர்களின் தனிநபர் வருவாய் குறைவாக உள்ளது. எனவேதான் கூறுகிறேன், அதிவளர்ச்சி பொருளாதார நாடு என்ற அடையாளத்திற்கு உரிமை கோருவதற்கு இன்னும் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.

உலக அளவில் இந்தியா ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியது ஒரு பெரிய வாக்குறுதியை அளித்தாலும், இந்தியா தனது ஆற்றலை விடவும் குறைவாகவே வழங்கி வருகிறது. எனவே அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது, நடைமுறைப்படுத்துவது, மீண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது தவிர வேறு வழியில்லை.

இந்தியா அதன் ஆற்றலுக்கேற்ற வளர்ச்சியை அடையவில்லை, ஆனால் அந்த வளர்ச்சி முனையில் உள்ளது. நிலுவையில் உள்ள சீர்திருத்தங்களைச் செய்தால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்படும்” என்றார் ரகுராம் ராஜன்.

தன்னுடைய ‘பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் உடையவரே மன்னன்” என்ற கூற்று குறித்து அவர் மேலும் கூறும்போது, “ஒரு பொதுவெளியில் அங்கம் வகிக்கும் நபர் கூறும் ஒவ்வொரு வார்த்தை அல்லது கூற்றும் அதன் அர்த்தத்திற்கு வெளியே வைத்து புரிந்து கொள்ளப்படுகிறது.

ஒரு செய்தித்தாள் தலைப்புச் செய்தி போல் வார்த்தைகள் அதன் கூற்றிடச் சூழலிலிருந்து பிடுங்கப்பட்டு தனியாக எடுக்கப்படும் போது ஒவ்வொருவரும் தங்களுக்கான அர்த்தத்தை அதில் நிரப்பி தீங்கு தரும் அல்லது விரும்பத்தகாத அர்த்தம் அளிப்பது என்பது ஒரு நியாயமான விளையாட்டாகிவிட்டது.

நாம் பொதுவாக உபயோகிக்கும் சொற்கள் அல்லது பழமொழிகள் வெகு சுலபமாக, வேண்டுமென்றே தவறாக விளக்கமளிக்கப்படுவதுண்டு.

நாம் அறிவுக்கு உகந்த ஒரு பொது உரையாடல் நடத்த வேண்டுமென்றால், வார்த்தைகளை அது கூறப்படும் அர்த்தச்சூழலில் வைத்து வாசிக்கப்பட வேண்டும் அதன் சூழலை தூக்கி வெளியே எறிதல் கூடாது.

ஆனால் எனது இந்த உருவகம் மூலம் பார்வையற்றோர் அல்லது பார்வைக் கோளாறு உள்ளவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x