Published : 09 May 2018 05:30 PM
Last Updated : 09 May 2018 05:30 PM

‘டீல் முடிந்தது’ - வால்மார்ட் - பிளிப் கார்ட் ஒப்பந்தம்: ஆன்லைன் சந்தையை வளைக்கும் அமேசான் திட்டம் முறியடிப்பு

பிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை, அமெரிக்காவின் வால்மர்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிளிப் கார்ட்டை வாங்கி, இந்திய ஆன்லைன் சந்தையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர அமேசான் மேற்கொண்ட முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. இந்திய ஆன்லைன் வர்த்தகத்தை வளைத்துபோட திட்டமிட்ட அமேசான், பிளிப் கார்ட்டை வாங்க நடவடிக்கை எடுத்தது.

ஆனால் இதை அறிந்த அமேசானின் போட்டி நிறுவனமான, அமெரிக்காவின் வால்மர்ட்டும் பிளிப் கார்ட்டுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதற்கான பேச்சுவார்த்தை பல நாட்களாக நடந்து வந்தன. பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிதி தகவல்களை சரி பார்ப்பதற்காக வால்மார்ட் தங்களுடைய உயரதிகாரிகளை அனுப்பியது.

இந்நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வால்மார்ட் வாங்கியுள்ளது. பிளிப் கார்ட் - வால்மார்ட் இடையே ஒப்பந்தம் இறுதியாகியுள்ளதாக சாப்ட் பேங்க் தலைமை செயல் அதிகாரி மாசாயோஷி தெரிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் நேற்று இரவு இறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிளிப் கார்ட்டின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 1 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 77 சதவீத பங்குகளை வாங்க வால்மார்ட் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வால்மார்ட் வாங்கும் பட்சத்தில், பிளிப்கார்ட் நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்க டைகர் குளோபல், ஆக்செல் பார்ட்னர்ஸ் மற்றும் நாஸ்பர்ஸ் ஆகிய நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

பிளிப் கார்ட்டை வாங்க அமேசான் நிறுவனமும் ஆர்வம் காட்டியதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவில் வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் அமோசான், 32,295 கோடி ரூபாய் வரை கடந்த ஆண்டு முதலீடு செய்துள்ளது. எலெட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்டவை மற்றுமின்றி பல சரக்கு உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்ய அமேசான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அமேசான் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் போட்டியாக வால்மார்ட் நிறுவனம் விளங்குகிறது. இந்தியாவில் அமேசானுக்கு போட்டியை ஏற்படுத்தி, அதன் வளர்ச்சியை தடுக்கும் வகையில் வால்மார்ட் நிறுவனம் அதற்கான செயல் திட்டங்களை முன்னெடுத்து வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிளிப் கார்ட்டை வாங்கும் முயற்சியில் வால்மார்ட் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்திய ஆன்லைன் சந்தையை வளைக்கும் அமேசானின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x