Published : 03 Mar 2018 09:46 AM
Last Updated : 03 Mar 2018 09:46 AM

எஸ்ஸார் ஸ்டீலை கைப்பற்ற நிப்பான், ஆர்சிலர் மிட்டல் கூட்டு

நிப்பான் ஸ்டீல் அண்ட் சுமிட்டோமோ மெட்டல் கார்ப்பரேஷனுடன் (என்எஸ்எஸ்எம்சி) இணைந்து எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை வாங்க இருப்பதாக ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது. திவாலாகும் நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த 12 நிறுவனங்களில் எஸ்ஸார் ஸ்டீலின் பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்ஸார் ஸ்டீலுக்கான ஆர்சிலர்மிட்டலின் தீர்வுத் திட்டத்தை இந்திய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டிருப்பதாக ஆர்சிலர்மிட்டல் அறிவித்துள்ளது. எஸ்ஸார் ஸ்டீலின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான விரிவான திட்டத்தை தாங்கள் வழங்கியிருப்பதாக கூறிய ஆர்சிலர்மிட்டல், இதை செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் இந்திய எஃகுத் துறையில் எஸ்ஸார் ஸ்டீல் உறுதியுடன் களமிறங்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆர்சிலர்மிட்டலின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மிட்டல் என்எஸ்எஸ்எம்சியுடன் இணைந்து எஸ்ஸார் ஸ்டீலை வாங்குவது தங்களை மேலும் வலுப்படுத்துவதாகவும் , இரு நிறுவனங்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த உறவு நிலவுவதாகவும் குறிப்பிட்டார். இந்திய உற்பத்தித் துறை வளர்ச்சிக்கும், இந்தியப் பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தாங்கள் இணைந்து செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.

1987-ல் இருந்து இரு நிறுவனங்களும் அமெரிக்காவில் இத்தகைய ஒப்பந்தங்களை செய்து வருகின்றன. 2014-ல் அமெரிக்காவின் அலபாமா நகரிலுள்ள ஏஎம்/என்எஸ் கால்வர்ட் ஸ்டீல் நிறுவனத்தை என்எஸ்எஸ்எம்சியுடன் இணைந்து ஆர்சிலர்மிட்டல் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. நஷ்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை இரு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன. ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் உலகின் 60 நாடுகளில் செயல்பட்டுவரும் முன்னணி எஃகு மற்றும் சுரங்க நிறுவனமாகும். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x