Published : 05 Oct 2017 10:07 AM
Last Updated : 05 Oct 2017 10:07 AM
கையிருப்பில் உள்ள 5.5 லட்சம் டன் பருப்பு உடனடியாக விநியோகம் செய்யப்படும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார். மேலும் அரசு 18 லட்சம் டன் பருப்பு கையிருப்பில் வைத்துள்ளதாகவும் கூறினார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் பாஸ்வான், ஐந்து மாநிலங்களின் மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட மத்திய சமூக நலத் திட்டங்களுக்காக குறைந்த விலையில் 5.5 லட்சம் டன் பருப்பு உடனடியாக மத்திய அரசு வழங்க உள்ளது.
பருப்பு கையிருப்பில் வைத்துக் கொள்ள மத்திய அரசு கடந்த ஆண்டில் முடிவு செய்தது. இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். மேலும் உள்நாட்டில் பருப்பு விலை அதிகரிக்கும் போது கையிருப்பு பருப்பை விநியோகிக்கவும் முடிவு செய்தது. முதல் முறையாக இந்த முடிவினை அரசு மேற்கொண்டது. இதனடிப்படையில் 20 லட்சம் டன் பருப்பு உள்நாட்டு கொள்முதல் மூலமும், இறக்குமதி மூலமும் கையிருப்பில் வைக்கப்பட்டது. தற்போது அரசின் கிடங்குகளில் 18 லட்சம் டன் பருப்பு கையிருப்பில் உள்ளது. இதிலிருந்து சில மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கு விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளோம்.
கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு குறைந்த விலையில் 3.5 லட்சம் டன் பருப்பு அளிக்கப்படும். சுமார் 2 லட்சம் டன் பருப்பினை மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களுக்கு அளிக்கப்படும். சமூக நலத்துறை அமைச்சகம் விரைவில் இதை மேற்கொள்ளும் என்றார்.
மேலும் குறிப்பிட்ட அளவு பருப்பு வெளிச் சந்தையிலும் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார். 2 லட்சம் டன் பருப்பு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமைச்சகத் தகவல்படி 4 லட்சம் டன் பருப்பு ஏலத்தில் விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் ஏ.அவினாஷ் ஸ்ரீவாத்சவ், கணிசமான அளவில் ஏல முறையில் விரைவில் விற்பனை செய்ய உள்ளோம். இதன் மூலம் சுமையை குறைக்க முடியும். குறைந்தபட்சம் 10 லட்சம் டன் பருப்பு இந்த வகையில் விற்பனை செய்ய உள்ளோம். மீதம் உள்ள 10 லட்சம் டன் பருப்பினை கையாள்வது எளிதாக இருக்கும். முதலில் கொண்டுவரப்பட்ட பருப்புகள் முதலில் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.
கடந்த ஆண்டில் உள்நாட்டு பருப்பு விநியோகத்தை சீராக்கவும், பருப்பு சில்லரை விலையை கட்டுப்படுத்தவும் அப்போதைய சந்தை விலையில் அரசு கொள்முதல் செய்தது. ஆனால் பருப்பு உற்பத்தி அதிகரித்ததால் விலை குறைந்தது. இதனால் ஆதார விலை அடிப்படையில் அரசு கொள்முதல் செய்தது.தற்போதுவரை சில்லரை வர்த்தகத்தில் குறைந்த விலையில் பருப்பு விற்பனை ஆகிறது.
2016-17 ஆண்டில் இந்திய பருப்பு உற்பத்தி இதுவரை இல்லாத அளவில் 22.95 லட்சம் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT