Published : 23 Aug 2017 10:22 AM
Last Updated : 23 Aug 2017 10:22 AM

சொகுசு கார்களை அரசு வரையறுக்க வேண்டும்: ஹூண்டாய் தலைமைச் செயல் அதிகாரி வலியுறுத்தல்

சொகுசு கார்களுக்கு கூடுதல் வரி (செஸ்) விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு கூடுதலாக விதிக்கப்படும் வரியானது எத்தகைய வாகனங்களுக்கானது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஒய்.கே. கூ தெரிவித்தார்.

டெல்லியில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஐந்தாவது தலைமுறை வெர்னாவை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தற்போதைய ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்பான வெர்னா மற்றும் எலன்ட்ரா ஆகியன சொகுசு கார் பிரிவில் வருகின்றன. ஆனால் உயர் விலையிலான பிஎம்டபிள்யூ, மெர்சிடஸ் மற்றும் ஆடி கார்களுக்கு விதிக்கப்படும் அதே அளவான கூடுதல் செஸ் இதற்கும் விதிக்கப்படுகிறது.

ஆனால் ஜிஎஸ்டி-க்கு முந்தைய வரி விதிப்பில் இப்போது சொகுசு கார்கள் பட்டியலில் உள்ள ஹூண்டாய் வெர்னா, எலன்ட்ரா ஆகியவற்றுக்கு குறைவான வரியே விதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் எவையெல்லாம் சொகுசு கார்கள் என்பதை அரசு வரையறுக்க வேண்டும். வரிகளை தீர்மானிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் இத்தகைய கார்களுக்கு 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை கூடுதல் வரி (செஸ்) விதிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் எப்போதிலிருந்து இந்த கூடுதல் வரி விதிக்கப்படும் என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார். எத்தகைய கார்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்பதில் குழப்பமான சூழல் நிலவுகிறது என்றார். ஒரு வேளை கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்பட்டால் இதனால் கார்களின் விலை உயரும். இருப்பினும் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்று தெரியவில்லை என்றார். இந்த விஷயத்தில் அரசிடமிருந்து தெளி வான வரையறையை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.

அரசின் பேட்டரி கார் திட்டத்தை ஹூண்டாய் செயல்படுத்துமா என்று கேட்டதற்கு, சர்வதேச அளவில் தங்கள் நிறுவனம் செயல்படுத்தும் வழியை பேட்டரி கார் தயாரிப்பிலும் பின்பற்றப் போவதாகக் குறிப்பிட்ட அவர், எஸ்யுவி-க்களும் இதே நடைமுறையில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூறினார்.அரசின் வரிச் சட்டங்கள் ஹைபிரிட் மாடல் கார்களுக்கு ஏற்புடையதாக இல்லாததால் அவற்றை தயாரிக்கும் திட்டம் இல்லை என்றார்.

தாராள சந்தையில் இதுபோன்ற கூடுதல் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் முதலீடு மேற்கொள்வது குறையும். இது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை எதிர்காலத்தில் பாதிக்கும் என்று கூ குறிப்பிட்டார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x