Last Updated : 19 Aug, 2017 03:05 PM

 

Published : 19 Aug 2017 03:05 PM
Last Updated : 19 Aug 2017 03:05 PM

சிகரெட் தயாரிப்பு பன்னாட்டு நிறுவனத்துக்கு இந்திய சுகாதார அமைச்சகம் கடும் எச்சரிக்கை

 

பிலிப் மோரிஸ் பன்னாட்டு நிறுவனம் தனது சிகரெட் விற்பனை உத்திகளில் நாட்டின் ‘புகைப்பிடித்தல் தடுப்பு’ சட்டத்தை கண்டபடி மீறிவருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அந்நிறுவனத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததோடு, நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது.

இந்தக் கடிதத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வெளியிட்ட செய்திகளை மேற்கோள் காட்டியுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.

ராய்ட்டர்ஸ் விசாரணையின்படி, பிலிப் மோரிஸ் நிறுவனம் செயல்படுத்தும் மார்க்கெட்டின் உத்தி கேள்விக்குரியது. இளைஞர்களை குறிவைத்து மார்க்கெட்டிங் செய்கிறது, இது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தியின் முதல் பத்தியில் பிலிப் மோரிஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்திகள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளது. இளைஞர்கள், யுவதிகள் அதிகம் கூடும் காபி கிளப்கள், இரவு விருந்து கிளப்புகள், பார்கள், மதுபான விடுதிகள் ஆகியவற்றில் மால்பரோ சிகரெட் விளம்பரம், மற்றும் இலவசமாக மால்பரோ சிகரெட்டை அவர்களுக்கு விநியோகித்தல், பெரிய டிவி திரைகளில் உலகின் நம்பர் 1 பிராண்ட் என்பது போன்ற விளம்பரங்கள். ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளது. இவையெல்லாம் நாட்டின் புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டங்களை மீறும் செயலாகும், இது தண்டனைக்குரிய குற்றம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தனது ஆகஸ்ட்10-ம் தேதி கடிதத்தில் தெரிவித்திருந்தது.

எனவே, “உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம், ஏன் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விளக்குங்கள்” என்று கடிதத்தில் எச்சரித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப் பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வரை அளிக்க சட்டத்தில் இடமுள்ளது. ஆனால் ராய்ட்டர்ஸ் விசாரணைக்கு பிலிப் மோரிஸ் நிறுவனம் எந்த பதிலையும் அளிக்க மறுத்துள்ளது.

மேலும் இந்திய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசிக்கும் சுகாதார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது, இதே ராய்ட்டர்ஸ் விசாரணைச் செய்தியில் ஐடிசியும் மேற்கூறிய பிலிப் மோரிஸ் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்வதைச் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால் இத்தகைய முறைதவறிய விளம்பரங்களினால் மால்பரோ பிராண்ட் சிகரெட்டுகளின் விற்பனை 4 மடங்குக்கும் அதிகமாக கூடியுள்ளது. ஐடிசிக்கும் பிலிப் மோரிஸுக்கும் உயர்தர சிகரெட் மார்க்கெட்டில் கடும் போட்டி நிலவுகிறது.

130 கோடி இந்தியர்களில் 100மில்லியன் பேர் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள். புகைப்பழக்கம் ஆண்டுக்கு 9 லட்சம் பேர்களின் உயிர்களை பலிவாங்குவதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் பிலிப் மோரிஸ் மற்றும் ஐடிசி நிறுவனங்களுக்கு அரசு தரப்பிலிருந்து குறைந்தது 3 நோட்டீஸ்களாவது சென்றிருக்கும், ஆனால் விளம்பர உத்திகள் இன்னமும் அகன்றபாடில்லை. சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பலவீனம் இருப்பதால் மாறாத நிலை தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x