Last Updated : 28 Nov, 2014 10:36 AM

 

Published : 28 Nov 2014 10:36 AM
Last Updated : 28 Nov 2014 10:36 AM

ரூ.10 செலவில் 60 கி.மீ. பயணம்

பெட்ரோல் விலையும் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது என்று நாம் ஒருபுறம் புலம்பும் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் இயற்கையும் சுற்றுச்சூழலும் இன்னொருபுறம் பாழடைந்து வருகின்றது. இதற்கு மாற்றாக மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய இ-வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் போதிய விழிப்புணர்வும் வரவேற்பும் இல்லாததால் அவை பெரியளவில் வெற்றி பெறவில்லை. இந்த நிலையிலும் கடந்த 3 ஆண்டுகளாக மாதத்துக்கு 1000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது கோ கிரீன் பிஒவி என்னும் இந்திய நிறுவனம்.

கர்நாடகத்தில் உற்பத்தி மையத்தை கொண்டுள்ள இந்நிறு வனத்துக்கு தென் இந்தியா முழுவதும் 72 இடங்களில் டீலர்கள் உள்ளனர். பெட்ரோல், டீசல் வண்டிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு முழுக்க முழுக்க மாசு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வண்டிகளை பிரபலப்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறுகிறது அந்நிறுவனம்.

இது குறித்து கோ கிரீன் பிஒவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திவிக் ரெட்டி ‘தி இந்து’ விடம் கூறியது:

உலகில் தங்கத்தை விட பெட்ரோலும் டீசலும் மிக முக்கிய மானதாகி கொண்டே போகிறது. பாலைவனம் நிறைந்த அரபு நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகளால் பணத்தின் மதிப்பு பல மடங்கு பெருகியுள்ளது. அதே நேரத்தில், ஏராளமான இயற்கை வளங்கள் உள்ள போதிலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் அவற்றை பெருமளவில் விலை கொடுத்து வாங்குகிறோம். இதோடு மட்டுமில்லாமல் அவற்றை பயன்படுத்தி நம் இயற்கையையும் பாழ்படுத்துகிறோம்.

கரியமில வாயு வெளியேற் றத்தால் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக வாகனங்களை உருவாக்க முடியுமா என்ற சிந்தனையில் உருவானதே பேட்டரியில் ஓடும் வாகனங்கள். இத்தகைய வாகனங்கள் இந்திய சந்தைக்கு வந்தடைவதில் மிகப்பெரிய தேக்கம் உள்ளது. அப்படியே வந்தாலும் அவற்றின் விலைக்கும் அவை தருகின்ற சேவைக்கும் நிறைய வித்தியாசம். அதிக விலை போட்டு குறைந்த தூரம் மட்டுமே ஓடக்கூடிய ஒரு வண்டியை யார் தான் வாங்குவார்கள்.

இந்த நேரத்தில் தான் கோ கிரீன் பிஒவி நிறுவனத்தை 2007-ம் ஆண்டு ஆரம்பித்தோம். 2007 முதல் 2011 வரை ஒரு சோதனைக்காலம் என்று தான் சொல்ல வேண்டும். பொதுமக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த 4 வருடங்களில் மாதத்துக்கே 6 முதல் 12 வண்டிகள் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இந்த மந்தமான விற்பனை குறித்து ஆய்வுகள் நடத்தி எங்களது பழைய குறைகளை கடந்து மீண்டும் புதிதாக சில மாற்றங்களை செய்து விற்பனையை தொடங்கினோம்.

2012 முதல் 2014 வரை மாதத்துக்கு 1800 வாகனங்கள் தற்போது விற்பனையாகின்றன. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த வண்டி கள் ஸ்கூட்டியை போல் தோற்ற மளிக்கும். கர்நாடகாவில் உள்ள எங்களது தயாரிப்பு மையத்தில் ஆண்டுக்கு 15 ஆயிரம் வாகனங் களை தயாரிக்கின்றோம்.

இவற்றில் 4 வகை உள்ளன. இதில் முதல் வகை கோரா. இது பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வண்டியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 50 கிமீ தூரம் வரை செல்லும். இதனால் 140 கிலோ வரை எடையை எடுத்து செல்ல முடியும். இதையடுத்து ‘கிமயா’ என்று ஒரு வாகனம் உள்ளது. இது அலுவலகம் செல்பவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட் டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கிமீ வரை செல்லும். கிமயா வண்டியால் 180 கிலோ வரை சுமக்க முடியும்.

இது தவிர பெருநகரங்களில் மார்கெட்டிங் துறையில் பணிபுரிபவர்கள், நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் வசதிக்காக ‘சுனொட்டி’ என்ற வண்டியை தயாரித்துள்ளோம். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிமீ பயணிக்க முடியும். இதற்கடுத்து ‘கோரா’ என்ற வண்டியுள்ளது, இந்த வண்டி சுமை தூக்குவதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கி.மீ வரை 150 கிலோ எடையை இழுத்து செல்லும்.

இந்த வண்டிகளை ஒருமுறை சார்ஜ் செய்வதற்கு ரூ.10 அளவுக்கு மட்டுமே மின்சாரம் செலவாகும். தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மின்சார பிரச்சினைகளின் காரணத்தால் இ-பைக்குகளுக்கான மார்கெட் ரொம்பவே சுருங்கியது.ஆனால் இப்போது இந்த வண்டிகள் கணிசமாக விற்பனையாகின்றன. எங்கள் வண்டிகளில் கோரா 39000 ரூபாய்க்கும், கிமயா 48500 ரூபாய்க்கும்,சுனொட்டி 49500 ரூபாய்க்கும், கவாச் 54000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

அண்டை நாடுகளான நேபாளம், சீனா போன்றவற்றிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளோம். அதன் பிறகு இதர வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவுள்ளோம். இங்கு மாசு ஏற்படுத்தும் பெட்ரோல், டீசல் வண்டிகள் பெரியளவில் விளம்பரப்படுத் தப்படுகின்றன. இதனால் மாற்று வாகனங்கள் சந்தையில் நிற்க முடிவதில்லை. மேலும் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்கிற வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு ‘தேசிய மின்சார வாகன திட்டம்’

(National electirc mobility mission) என்பதை அறிமுகப்படுத்தியது.ஆனால் இதுவரை அது செயல்படாமலேயே உள்ளது. அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் தான் நிறைய பேர் துணிச்சலாக இ-வாகனங்களை தயாரிக்க முன்வருவார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x