Published : 04 Jul 2015 10:17 AM
Last Updated : 04 Jul 2015 10:17 AM

தொழில் ரகசியம்: வான் கோழியும் வியாபாரமும்

வான்கோழிகளைப் பற்றியும் இதாலஜி பற்றியும் கொஞ்சம் பேசுவோம். மிருகங்களை அதன் இயற்கை சூழலில் ஆராயும் இயலுக்கு இதாலஜி (Ethology) என்று பெயர். மிருகங்கள் பிஹேவியரல் ஆராய்ச்சியாளர் ‘எம். டபிள்யு. ஃபாக்ஸ்’ வான்கோழிகளை ஆராய்பவர். பெண் வான்கோழிகள் சிறந்த அம்மாக்கள். தன் குஞ்சுகளை காப்பதில் கில்லாடிகள். அவைகளிடம் ஒரு ஆச்சரியமான விஷயத்தை கண்டுபிடித்தார் ஃபாக்ஸ். வான்கோழி குஞ்சு ‘சீப் சீப்’ என்று சத்த மிடும். குஞ்சின் தோற்றம், கலர், வாசனை விட அம்மா சீப் சீப் சத்தம் கொண்டே தன் குஞ்சுகளை இனங்கண்டன. சீப் சீப் என்று சத்தமிடும் குஞ்சை தான் அம்மா பராமரிக்கும். மற்றதை கண்டுகொள் ளாது. சமயங்களில் கொன்றே விடும்.

பொம்மை போல்கேட்

ஃபாக்ஸ் ஒரு காரியம் செய்தார். வான்கோழிகளின் பரம எதிரி ‘போல் கேட்’. கீரிப்பிள்ளை போன்ற மிருகம். இதற்கும் வான்கோழிக்கும் ஆகவே ஆகாது. ஒன்றை ஒன்று பார்த்தால் வாய்க்கா வரப்பு தகராறு செய்பவர்கள் தோற்பார்கள். பாம்பு கீரி போல் அடித்துக் கொள்ளும். போல்கேட் குட்டி போல ஃபாக்ஸ் ஒரு பொம்மை செய்து வான் கோழியிடம் நகர்த்தினார். வான்கோழி அந்த பொம்மையைப் பார்த்த மாத்திரம் அடித்து துவம்சம் செய்தது.

அடுத்து போல்கேட் பொம்மைக்குள் ‘சீப் சீப்’ என்று சத்தம் வரும் வகையில் ஸ்பீக்கர் ஒன்றை வைத்து வான்கோழி யிடம் நகர்த்தினார். என்ன ஆச்சரியம், வான்கோழி அதை தன் குஞ்சு போல் பாவித்து இறக்கையால் மூடியது. அடுத்து ஃபாக்ஸ் ரிமோட் மூலம் சீப் சீப் சத்தத்தை நிறுத்தினார். உடனேயே வான்கோழி அந்த பொம்மையை கடித்துக் குதறி பீஸ் பீஸாக்கியது.

பொதுவான இயல்பு

வான்கோழிகளிடம் மட்டுமல்ல, வேறு சில மிருகங்களிடமும் இந்த குணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதாலஜிஸ்ட்ஸ் இதை Fixed-action pattern என்கின்றனர். மிருகங்கள் செய்யும் சில செயல்களைத் தூண்ட சில விசைகள் உண்டு. அந்த விசைகளின் தூண்டுதலால்தான் மிருகங்கள் பல செயல்களை சிந்திக்காமலேயே செய்கின்றன. மிருகங்களுக்கு ஐந்தறிவு மட்டும் இருப்பதால் தான் இப்படி என்று தானே நினைக்கிறீர்கள்?

மனிதர்களிடம்…

வான்கோழிகளை விட்டு மனிதர் களுக்கு வருவோம். மனிதர்களிடம் உதவி கேட்கும் போது காரணத்தை கூறி கேட்டால் உதவி கிடைக்கிறது. ‘தர்மம் பண்ணும்மா’ என்று கேட்பவரை விட ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு தர்மம் பண்ணும்மா’ என்று கேட்பவர் மேல் பரிதாபம் தோன்றி உதவி செய்யத் தோன்றுகிறதல்லவா!

‘ஹார்வர்ட் பல்கலைக்கழக’ சோஷி யல் சைக்காலஜிஸ்ட் ‘எலன் லாங்கர்’ இதைப் பற்றி ஆராய்ச்சி செய்தார். ஜெராக்ஸ் செய்ய நின்று கொண்டிருந் தவர்களிடம் ‘ஐந்து பக்கங்கள் இருக்கு. ஏனென்றால் அவசரம், மெஷின் யூஸ் பண்ணட்டுமா’ என்று கேட்டார். 94% பேர் வழி விட்டனர். அடுத்து சிலரிடம் ‘ஐந்து பக்கங்கள் இருக்கிறது, மெஷின் யூஸ் பண்ணட்டுமா’ என்று கேட்டார். இப்பொழுது 60% பேரே வழிவிட்டனர்.

அவசரம் என்று காரணம் சொன்னதால் தான் மற்றவர் வழிவிட்டனர் என்றுதானே நினைக்கிறீர்கள். லாங்கர் பிரயோகித்த மூன்றாவது செயல் இது இல்லை என்று புரிய வைக்கும். இம்முறை க்யூவில் நிற் பவர்களிடம் ‘ஐந்து பக்கங்கள் இருக் கிறது. ஏனென்றால் செராக்ஸ் எடுக்கனும். மெஷின் யூஸ் பண்ணட்டுமா’ என்று கேட்டார்’. 93% பேர் வழிவிட்டனர்.

ஏனென்றால்…

நன்றாக கவனியுங்கள். மூன்றாவது முறை ‘ஏனென்றால்’ என்றாரே தவிர என்ன காரணம் என்று சொல்லவில்லை. இருந்தும் மக்கள் வழிவிட்டனர். அதா வது உதவி செய்ய காரணத்தை எதிர்பார்க் கிறோம். என்ன காரணம் என்பது கூட முக்கியமில்லை. ‘ஏனென்றால்’ என்று கேட்ட மாத்திரம் காரணத்தை கேட்டது போல் மனம் உதவி செய்ய தோன்றுகிறது.

சீப் சீப் என்ற சத்தம் கேட்டவுடன் தன் குட்டி என்று எப்படி வான்கோழியின் தாய்மை உணர்ச்சி தூண்டப்படுகிறதோ ‘ஏனென்றால்’ என்ற வார்த்தை கேட்ட வுடன் காரணம் தெரிந்த மாதிரி உதவி செய்யும் எண்ணம் நமக்கு தூண்டப் படுகிறது! அப்படி பார்க்கும் போது நாம் செய்வதும் இதாலிஜிஸ்ட்ஸ் கூறுவது போல் Fixed-action pattern தானே!

ஏன் இப்படி செய்கிறோம்?

காலம் இதுவரை கண்டிராத வேகத் தில் சுழலும் உலகில் இருக்கிறோம். இதுவரை உணராத ஒரு காம்ப்ளிகேட்டடு சூழலில் வாழ்கிறோம். வாழ்க்கையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, மாறும் சூழல்களை தாக்குப் பிடிக்க நமக்கு சில குறுக்கு வழிகள் தேவைப்படுகின்றன. தினம் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்ச் சியை, சூழலை, மனிதரை சரியாக இனங்கண்டு, அனைத்து விஷயங்களை யும் தெளிவாக ஆராயும் தகுதியோ, நேரமோ, சக்தியோ நமக்கில்லை. டக்கென்று ஒரு விஷயத்தை கிரகித்து, பட்டென்று அதை ஆராய்ந்து, படாரென்று பதிலளிக்க வேண்டிய கட்டாயம் தான் இன்றைய உலகம். நாம் வாழும் இன்றைய வாழ்க்கை.

நவீன வாழ்க்கையின் தவிர்க்க முடி யாத இச்சூழலை உணர்ந்து தான் இங்கி லாந்து தத்துவ மேதை ‘ஆல்ஃப்ரெட் நார்த் வைட்ஹெட்’ என்பவர் ‘வாழ்க்கையின் தினப்படி செயல்களை சிந்திக்காமல் செய்வதன் மூலமே நாகரீகம் முன்னேறுகிறது’ என்கிறார்.

தரத்தை நிர்ணயிக்கும் விலை

சட்டை வாங்க செல்கிறோம். இரண்டாயிரம் ரூபாய்க்கு சட்டை இருக்கிறது. இருநூறு ரூபாய்க்கும் சட்டை கிடைக்கிறது. பார்த்த மாத்திரத்தில் இரண்டாயிரம் ரூபாய் சட்டையின் தரம் அதிகம் என்று நினைக்கிறோம். அதன் தரத்தை டெஸ்ட் செய்தோமா? அல்லது டெஸ்ட் செய்யும் தகுதியும் திறமையும் நமக்கிருக்கிறதா? அது தெரிந்த ஒருவரிடம் தான் போய் கேட்டோமா? இல்லை. இருந்தும் இரண்டாயிரம் ரூபாய் சட்டை தரத்தில் சூப்பர் என்கிறோம். ஏன்? எப்படி?

சட்டையின் தரத்தை நிர்ணயிக்க ஏராளமான வழிகள், படிகள் உண்டு. அதை செய்து பார்க்கும் திறனோ, நேரமோ, பொறுமையோ நமக்கில்லை. விலை மட்டும் பார்த்து பட்டென்று ‘அதிக விலை = அதிக தரம்’ என்று முடிவு செய்கிறோம். ஆக, ஆயிரம் வழி இருந்தாலும் நம் மனம் செயல்படுவது விலை என்ற சீப் சீப் சத்தம் கொண்டு!

அதிவேக, அசுர மாற்றங்கள் நடைபெறும் உலகில் வாழும் சிரமத்தை சமாளிக்கும் சக்தி நமக்குத் தேவைப்படுகிறது. சதா சிந்தித்து செயல்படும் சிரமத்தை தாக்குப் பிடிக்கும் சக்தியும் வேண்டியிருக்கிறது. அதனால் தான் தேவையான சில விசைகளை மட்டுமே நம்பி செயல்படும் Fixed-action pattern வாழ்க்கை வாழ்கிறோம்.

தள்ளுபடி என்றால் லாபமா?

ஜவுளி கடைகளின் ஆடித் தள்ளுபடி விளம்பரங்கள் பார்க்கிறோம். ‘குறைந்த விலை’, ‘அதிரடி ஆஃபர்’, ‘விலைக்குறைப்பு’ என்ற வார்த்தைகளை கேட்கிறோம். இதை சும்மா விடக்கூடது என்று மனம் பொங்குகிறது. போட்டது போட்டபடி ஜவுளி கடைக்கு ஓடுகிறோம். தேவையானது தேவையற்றது, வேண்டி யது வேண்டாதது என்று யோசிக்காமல் வாங்குகிறோம். விலை குறைவு, நமக்கு லாபம் என்கிறது மனம்.

கடைகள் நிஜமாகவே விலையை குறைத்ததா, இல்லை சும்மாவேணும் விலை குறைப்பு என்று டகால்ட்டி வேலை செய்கிறதா என்று நம் மனம் பார்ப்பதில்லை. பழைய விலையையும் ஆடி விலையையும் கம்பேர் செய்வதில்லை. ஆடி என்றாலே விலை குறைப்பு என்று மனம் ஒப்புக்கொள்கிறது. சிந்திக்காமல் வாங்கத்தான் மனம் அலைகிறது.

சீப்பாய் கிடைக்கிறது என்று கேட்டு கடைத்தெருவுக்கு ஓடும் நமக்கும் சீப் சீப் சத்தம் கேட்டு தன் பரம எதிரியை கொஞ்சும் வான்கோழிக்கும் என்ன சார் வித்தியாசம்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x