Published : 01 Apr 2014 09:29 PM
Last Updated : 01 Apr 2014 09:29 PM

குறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிப்பது கூடாது: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு

சேமிப்புக் கணக்கில் குறைந்த பட்ச தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வெளியிடப்பட்டது. அப்போது சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்ற உத்தரவை ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பிறப்பித்தார்.

வாடிக்கையாளர்களின் சூழ்நிலையை அல்லது அவர்களது கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல் வங்கிகள் தங்களுக்கு சாதகமாக அபராதம் விதிக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர்கள் கணக்கில் வங்கிகள் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தொகையை எட்டியபிறகு வங்கிச் சேவையைத் தொடர அனுமதிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல பரிவர்த்தனை நடக்காத வங்கிக் கணக்குகள் மீதும் இதுபோன்ற அபராதம் விதிக்கக் கூடாது என்று அவர் மேலும் கூறினார். சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாமல் இருந்தாலும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அபராதம் ஏதும் விதிப்பதில்லை. ஆனால் ஐஓபி, கனரா வங்கி உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகள் ரூ. 20 அபராதம் விதிக்கின்றன.

ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி வாடிக்கை யாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் ஒவ்வொரு காலாண் டிலும் ரூ.10,000 வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.750 அபராதம் விதிக்கின்றன. இவ்விரு வங்கிகளின் கிராமப்புற வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் ரூ.5,000 தொகையை வைத்திருக்க வேண்டியது கட்டா யம் என்ற நிலை தற்போது உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x