Last Updated : 02 Jan, 2015 11:11 AM

 

Published : 02 Jan 2015 11:11 AM
Last Updated : 02 Jan 2015 11:11 AM

ஐஷரின் கன ரக வாகனங்கள்

இந்தியாவின் முன்னணி கன ரக வாகன தயாரிப்பு நிறுவனமான ஐஷர், அதிக திறன் மற்றும் சக்தியை கொண்ட பி.ஆர்.ஒ 2000, 3000, 6000 வகை டிரக்குகளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய விவசாயிகளின் பயன்பாட்டுக்காக இன்றைக்கு எத்தனையோ நிறுவனங்களின் டிராக்டர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

எத்தனை இருந்தாலும் விவசாய தேசமான இந்தியாவுக்கு டிராக்டரை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமை ஐஷரையே சாரும். சுதந்திரத்துக்கு முன்பே நாட்டில், டிராக்டரை அறிமுகப்படுத்தி விவசாய புரட்சிக்கு வழிவகுத்த பெருமையும் இந்நிறுவனத்துக்கு உண்டு.

1930களின் இறுதியில் ஜெர் மனியிலிருந்து டிராக்டர்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்து வந்த ஐஷர், தொடர்ந்து முன்னோடியாக 1950-களின் இறுதியில் சொந்தமாகவே டிராக்டர்களை தயாரிக்க ஆரம்பித்தது.

இதன் மூலம் டிராக்டர் தயாரிப்பில் ஈடுபட்ட இந்திய நிறுவனம் என்ற பெருமையும் ஐஷருக்கு உண்டு. ஐஷரின் வர்த்தக ரீதியான கன ரக வாகன விற்பனைக்கு இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் ஏக கிராக்கி. ஒரு பக்கம் சொந்தமாக வர்த்தகம், இன்னொரு பக்கம் ராயல் என்ஃபீல்டின் விற்பனை உரிமை, மற்றொரு புறம் வோல்வோ, பொலாரிஸ் போன்ற நிறுவனத்துடன் இணைந்து தனது சந்தையை வலிமையாக்கி வருகிறது.

வணிக ரீதியான கன ரக வாகனங்களை உருவாக்குவதற்கு மத்திய பிரதேசத்தில் உள்ள பிதம்பூரில் 83 ஏக்கர் நிலப் பரப்பில் தனது உற்பத்தியை ஆலையைக் கொண்டுள்ளது ஐஷர். கடந்த 2009 ம் ஆண்டு தனது உற்பத்தி மையத்தை மேலும் மெருகேற்றியது. இதன் மூலம் பிதம்பூர், உற்பத்தி மையத்தில் ஆண்டுக்கு 50,000 என்கிற அளவில் வாகனங்கள் உற்பத்தியாகின்றன.

இந்த நேரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிரக், ஆர்டிகுலேட்டட் டிராக்டர், ஸ்கைலைன் வோல்வோ பேருந்துகள் என்ற புதுமைகளை சந்தைக்கு கொண்டு வந்த ஐஷர் இந்தாண்டில், 280 குதிரை திறன் கொண்ட கன ரக வாகனங்களை வரை அறிமுகப்படுத்தவுள்ளது. இது தொடர்பாக ஐஷர் இந்தியா நிறுவனத்தின் ஊடக தொடர்பு அதிகாரியான ஷ்ரேயாஸ் பட் கூறியதாவது:

கடந்தாண்டில், முக்கியமாக ஸ்கைலன் லிமோ, பிஆர்ஓ 1110, பிஆர்ஓ 110xp உள்ளிட்ட புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறந்த வரவேற்பைப் பெற்றன. கனரக வாகன விற்பனையில் புதிய அறிமுகங்களை கொடுத்து வரும் ஐஷர் 2008-ம் ஆண்டு வோல்வோ நிறுவனத்துடன் கைகோர்த்து 50:50 அடிப்படையில், உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.

ஐஷரின் வாகனங்களை 3 பிரிவாக சந்தைப்படுத்தி வருகிறோம். ஒன்று, ஐஷர் பேருந்துகள், 5 முதல் 14 டன் கொண்ட கன ரக வாகனங்கள் மற்றும் 16 டன்னுக்கு மேல் உள்ள கன ரக வாகனங்கள். இவை எல்லாமும் பிதம்பூர் ஆலையில் தயாராகின்றன. இதில் கடந்தாண்டு 5 முதல் 14 டன் வரையிலான கன ரக வாகனங்களுக்கு பெரியளவில் வரவேற்பு இருந்தது. வாகனங்களின் அடிப்படையில் பார்த்தால், டிப்பர் ( 8 டன் முதல் 25 டன், ஹாலேஜ் (5 டன் முதல் 31 டன்), ஆர்டிகுலேட்டட் டிராக்டர் ( 40 டன்) இது தவிர, பள்ளி பேருந்துகள், ஊழியர்கள் பேருந்து, விவசாயம், கடல்சார் வாகனங்கள் போன்றவற்றுக்கான என்ஜின்கள் என ஐஷர் பலதரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைகளில் அறிமுகப்படுத்தி வருகிறோம்.

கடந்த நவம்பரில் மட்டும் 2,778 வாகனங்கள் விற்பனையாகின, இதில் ஏற்றுமதியின் எண்ணிக்கை 545 ஆகும். கடந்தாண்டின் அதிகபட்ச விற்பனை ஜுலையில் நடந்தது. அப்போது, மொத்தம் 3341 வாகனங்களை விற்பனை செய்யப்பட்டன.

கடந்த செப்டம்பர் வரை மட்டுமே ஐஷரின் வருவாய் ரூ. 6,444.50 கோடியாக சாதனை படைத்தது. இதுமட்டுமன்றி, 2013-ல் எங்களின் மொத்த விற்பனை 48,242 ஆக இருந்தது, இதுவே 2014-ல் 80 ஆயிரத்தை தாண்டியது. தவிர இந்தாண்டும் நிறைய புது அறிமுகங்களை கொண்டு வரவுள்ளோம்.

பிஆர்ஓ 1000 வகையறாவில் 14 டன் எடையுடன் 3.3 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட கனரக வாகனங்கள், பிஆர்ஓ 3000 வகையில் 10.5 டன் திறனில் 3.8 லிட்டர் என்ஜின் கொண்ட வாகனங்கள், 25 டன் கொண்ட பிஆர்ஒ 6000 வகை கனரக வாகனங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது தவிர 49 டன் கொண்ட (6X4) டிராக்டர் ட்ரெய்லர், 280 குதிரைத்திறன் கொண்ட பிஆர்ஒ 8000 ரக டிரக்குகளையும் இந்தாண்டில் உற்பத்தி செய்ய திட்டமுள்ளது. இது தவிர பேருந்துகளிலும் புதியவகை சொகுசு பேருந்துகளை உருவாக்குவது குறித்தும் கள ஆய்வு நடத்திக்கொண்டுள்ளோம். விரைவில் அவை சந்தைகளை தொடும்.

தமிழகத்தில் பொருத்தவரை சென்னையில் எம்.எம்.டி.ஏ மற்றும் கொளத்தூரில் ஐஷர் விற்பனை நிலையம் உள்ளது. இந்த இரு விற்பனை நிலையங்களும் திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம், போன்ற மாவட்டங்களுக்கான வாகன தேவையை பூர்த்தி செய்கிறது.

இதுதவிர கோவை, சேலம், கரூர், திருச்சி, மதுரை என தமிழகத்தில் 15-க்கும் அதிகமான ஐஷர் விற்பனை நிலையங்களும், சர்வீசிங் மையங்களும் உள்ளன. சென்னை ஊரப்பாக்கத்தில் ஐஷரின் பிரதான சர்வீசிங் மையம் இயங்கி வருகிறது என்றார் ஷ்ரேயாஸ் பட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x